சீர்காழியை அடுத்து மங்கைமடம் கிராமத்தில் தெருவில் விளையாடிய இரண்டு சிறுவர்களை தெருநாய் கடித்ததில் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


தொடரும் நாய்கடி சம்பவங்கள் 


சமீப காலமாக நாய்கடித்ததாக செய்திகள் பரவலாக வந்தவண்ணம் உள்ளது. அதிலும் குறிப்பாக சிறுவர், சிறுமியர் அதிகளவில் இந்த நாய்கடிக்கு ஆளாகுவதும், அதற்கு தெருநாய்கள் மற்றும் இன்றி வீடுகளில் வளர்க்கப்படும் பல்வேறு இன நாய்களும் கடிப்பதில் விதிவிலக்கு இன்றி தாக்குதலில் ஈடுபடுகின்றனர். தற்போது கூட இந்த செய்தியினை  படித்துக்கொண்டிருக்கும்போது கூட தமிழ்நாட்டில் ஏதோ ஒரு இடத்தில் யாரோ ஒரு குழந்தைகள், முதியவரைகள், பாதசாரிகள், சைக்களில், பைக் என சென்று கொண்டிருப்பவரை தெரு நாய் ஒன்று துரத்திக் கொண்டிருக்கும். 




நாய்கடியில் முதலிடம் வகிக்கும் தமிழ்நாடு 


சா்வதேச அளவில் இந்தியாவும், இந்திய அளவில் தமிழகமும் தெரு நாய்களின் எண்ணிக்கையிலும், விஷக்கடியிலும் முதன்மை வகிக்கின்ளது. உலக வல்லரசாக வேண்டும் என்கிற கனவில் மிதக்கும் ஒரு தேசம், கட்டுப்பாடில்லாமல் வீதிகளில் தெரு நாய்கள் திரியும் தேசமாக இருக்க முடியாது, கூடாது. கணக்கில் அடங்காத அளவிலான தெரு நாய்களின் தேசமாக இந்தியா மாறியிருக்கிறது. விஞ்ஞான ரீதியான அணுகுமுறை இல்லாமல் இதற்கு விடை காண்பது எளிதல்ல. உலக சுகாதார நிறுவனத்தின் உத்தேசப்படி, இந்தியாவில் ஆறு கோடிக்கும் அதிகமான தெரு நாய்கள் காணப்படுகின்றன. உலகில் நிகழும் ‘ரேபீஸ்’ எனப்படும் வெறிநாய்க் கடி உயிரிழப்பில் 36 சதவீதம் இந்தியாவில் நிகழ்கின்றன. அதைவிட வேதனையான விஷயம், வெறிநாய்க் கடியால் உயிரிழப்பவா்களில் 30 இருந்து - 60 சதவீதம் பேர் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஆகும்.
சென்னை போன்ற பெருநகர மாநகராட்சிகளில் நாள்தோறும் குறைந்தது 30 பேராவது நாய்க்கடிக்கு ஆளாகியுள்ளனர்.  




கட்டுப்படுத்த முறையான நடவடிக்கைகள் வேண்டும் 


மத்திய சுகாதார அமைச்சகம் மாநிலங்களவையில் தெரிவித்திருக்கும் புள்ளிவிவரத்தின் படி, தமிழ்நாடில் மட்டும் தெரு நாய்க்கடியால் இந்தாண்டு 4.4 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 27.59 லட்சம் போ் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனா். முறையான தடுப்பூசி, கருத்தடை, தத்தெடுக்கும் வசதி, குட்டிகளை தெருவில் விடுவதற்குத் தடை போன்றவற்றின் மூலம் தெரு நாய் பிரச்னையை எதிா்கொள்ள முடியும். அதற்கு முனைப்பும், தீவிரமான நடவடிக்கையும் அவசியம். ஒருசில நாய்களுக்கு தடுப்பூசி போடுவதாலும், கருத்தடை செய்வதாலும் பிரச்னைக்குத் தீா்வு காண முடியாது. தெருவோரக் கடைகளும், முறையாக குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதும் தொடரும் வரை நாய்க்கடி பிரச்னையும் தொடரும்.




சீர்காழி அருகே சிறுவர்களை கடித்து வரும் தெரு நாய்கள்


இந்நிலையில் தான் சமீபத்திய சென்னையில் ஒரு சிறுமியை வளர்ப்பு நாய் கொடுரமாக தாக்கி கடித்ததில் ஆபத்தான நிலையில் அந்த சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அந்நிகழ்வு பெரும் பேசு பொருளாக மாறியது. இந்த சூழலில் தான் தற்போது அதேபோன்று சம்பவம் தொடர்ந்து மயிலாடுதுறையில் மாவட்டம் சீர்காழி அருகே நடந்தேறி வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நெப்பத்தூர் ஊராட்சிக்குட்பட்ட தீவு கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகரன் இவர் செங்கல் அறுக்கும் கூலித்தொழிலாளி. ஞானசேகரன் அவரது மனைவி தமிழரசி கடந்த புதன்கிழமை அன்று முல்லையம்பட்டினம் கிராமத்தில் செங்கல் அறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.  அப்பொழுது அவரது மகன் அருகில் விளையாடி கொண்டிருக்கும் பொழுது அவ்வழியே வந்த தெருநாய் ஒன்று சிறுவனை கடித்துள்ளது. அதனை அடுத்து சிறுவனின் அலறல் கேட்டு ஓடி வந்த ஞானசேகரன் குழந்தையை மீட்டுள்ளார். இதில் சிறுவனுக்கு வயிறு மற்றும் முதுகுப் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சிகிச்சைகாக சீர்காழி அரசு மருத்துவமனையில் கொண்டு மகனை சேர்த்தார். அங்கு சிறுவனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. 


நாய்கடிக்கு ஆளான மேலும் இரண்டு சிறுவர்கள்


இந்த அதிர்ச்சி சம்பவத்தில் இருந்து அப்பகுதி மக்கள் இன்னும் மீளாத சூழல் அதே கிராமத்திற்கு அருகே மங்கைமடம் என்ற பகுதியில் இன்று மீண்டும் தெரு நாய் கடித்ததில் இரண்டு சிறுவர்கள் காயமடைந்து சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம்  சீர்காழி அடுத்த மங்கைமடம் பகுதியில் 8 வயது சிறுவன் தர்ஷன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது தெரு நாய் கடித்துள்ளது. மேலும் அதே நாய் அப்பகுதியை சேர்ந்த தர்ஷார்த்  என்ற நான்கரை வயது சிறுவனையும் கடித்துள்ளது. இதனால் படுகாயபனம் அடைந்த இரண்டு சிறுவர்களும் தற்போது சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  சீர்காழி அருகே தொடர்ந்து குழந்தைகள் நாய் கடிக்கு ஆளாகும் சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.