மயிலாடுதுறை: மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், அவர்களைத் சுயதொழில் முனைவோராக மாற்றும் நோக்கத்திலும், மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் ஐஓபி ஆர்செடி (IOB RSETI - Rural Self Employment Training Institute) நிறுவனம் இணைந்து நடத்தும் 10 நாட்கள் குறுகிய கால சிறப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் இன்று தொடங்கியது. மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட அறிவகம் மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில் நடைபெற்ற இந்த விழாவில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்  ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி இப்பயிற்சி முகாமினை முறைப்படி தொடங்கி வைத்தார்.

Continues below advertisement

சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்கும் சிறப்புப் பயிற்சி

மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் மற்றவர்களுக்கு நிகராகத் தங்களது சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் இப்பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் வசிக்கும் 18 வயது முதல் 50 வயது வரை உள்ள தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த 10 நாள் முகாமில் பல்வேறு தொழில் சார்ந்த வாழ்வாதாரப் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன.

இப்பயிற்சி முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்துள்ள சுமார் 35 மாற்றுத்திறனாளிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளனர். அவர்களுக்குப் பயிற்சி காலத்தின் போது, தற்போதைய சந்தை தேவைக்கேற்ப எளிய முறையில் வருமானம் ஈட்டக்கூடிய சுயதொழில்கள் குறித்த செய்முறை விளக்கங்களும், வணிக மேலாண்மை ஆலோசனைகளும் தகுதி வாய்ந்த வல்லுநர்களால் கற்றுத்தரப்படவுள்ளன.

Continues below advertisement

வங்கி கடன் மற்றும் சான்றிதழ் உதவிகள்

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்  ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், பேசுகையில்:"மாற்றுத்திறனாளிகள் தங்களின் குறைபாடுகளைக் கடந்து, தங்களுக்குள் இருக்கும் திறமைகளைத் கண்டறிந்து வெளிக்கொணர வேண்டும். இந்த 10 நாள் சிறப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி அவர்களின் வாழ்வை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவும் ஒரு சிறந்த அடித்தளமாகும். இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்குப் பயிற்சியின் நிறைவில் அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இந்தச் சான்றிதழ்களைப் பயன்படுத்தி, அவர்கள் தங்களுக்குத் தேவையான சுயதொழிலைத் தொடங்குவதற்குக் கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் மானியத்துடன்கூடிய தொழிற்கடன்களை எளிய முறையில் பெற்றுக்கொள்ள மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்."இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் இடைத்தரகர்கள் இன்றி நேரடியாகத் தொழில் தொடங்க அரசுப் பக்கபலமாக இருக்கும் என்பதை அவர் உறுதியளித்தார்.

உயரதிகாரிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்பு

இந்தத் தொடக்க விழாவில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)  கோகுல், முன்னிலை வகித்து, மாற்றுத்திறனாளிகள் இந்த வாய்ப்பினை எவ்வாறு பொருளாதார ரீதியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது குறித்து எடுத்துரைத்தார். மேலும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கணபதி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

இவர்களுடன் ஐஓபி ஆர்செடி (IOB RSETI) நிறுவனத்தின் திட்ட இயக்குநர்கள், முதன்மை பயிற்றுநர்கள், அறிவகம் இல்லத்தின் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தைச் சேர்ந்த அரசு அலுவலகப் பணியாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு பயிலாளர்களை வாழ்த்தினர்.

பயனாளிகள் வரவேற்பு

முறையான வாழ்வாதாரப் பயிற்சி மட்டுமின்றி, தொழில் தொடங்குவதற்கான வங்கி கடன் ஆலோசனைகளும் ஒரே கூரையின் கீழ் வழங்கப்படுவதால், பயிற்சியில் பங்கேற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இந்தத் திட்டத்திற்கு நெஞ்சார்ந்த நன்றியினையும், மகிழ்ச்சியினையும் தெரிவித்துள்ளனர். வரும் 10 நாட்களுக்கு இந்தத் தீவிரப் பயிற்சி முகாம் அறிவகம் இல்ல வளாகத்தில் தொடர்ந்து நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.