மயிலாடுதுறை: தமிழக சட்டமன்ற தேர்தல் காரணமாக நடைமுறையில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் (Model Code of Conduct) முழுமையாகத் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று மீண்டும் தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்கள் குறைகளைத் தெரிவிக்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பெருமளவில் திரண்டனர்.

Continues below advertisement

குவிந்த மனுக்கள்

மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த அமர்வில், கிராமப்புற மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களின் வாழ்வாதாரம், அடிப்படை வசதிகள் மற்றும் தனிப்பட்ட குறைகள் குறித்த 127 கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் நேரடியாக வழங்கினர்.

பெறப்பட்ட 127 மனுக்களின் விவரம் 

* முதியோர், மாற்றுத்திறனாளிகள் & கைம்பெண்கள் உதவித்தொகை - 28 

Continues below advertisement

* நில அபகரிப்பு மற்றும் நிலப் பிரச்சனைகள் - 15 

* பல்வேறு புகார்கள் தொடர்பான மனுக்கள் - 15 

* வேலைவாய்ப்பு கோரி விண்ணப்பங்கள் - 14 

* இதர பொதுவான கோரிக்கைகள் - 12 

* இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் பட்டா மாறுதல் - 10 

* ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோருதல் - 10 

* குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் - 09 

* கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் - 08 

மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக உதவி/உபகரணங்கள் - 06 

என மொத்தம் - 127 மனுக்கள் பெறப்பட்டன.

உடனடி நடவடிக்கைகளுக்கு ஆட்சியர் உத்தரவு

பெறப்பட்ட மனுக்களை ஒவ்வொன்றாக ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், மனுதாரர்களின் குறைகளை கனிவுடன் கேட்டறிந்தார். பின்னர், அந்தந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களிடம் (வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை, காவல்துறை மற்றும் சமூக நலத்துறை) உடனடியாக ஒப்படைத்தார்.

அப்போது அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய ஆட்சியர், "பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது காலதாமதமின்றி, சட்ட விதிகளுக்கு உட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குறிப்பாக, அடிப்படை வசதிகள் கோரும் மனுக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான விவரங்களை சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க வேண்டும்" எனத் திட்டவட்டமாக உத்தரவிட்டார்.

கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை

இன்றைய கூட்டத்தின் சிறப்பம்சமாக, சமூக நீதியைப் பேணும் வகையில் ஒரு முக்கியப் பணி நியமன ஆணையை ஆட்சியர் வழங்கினார். மயிலாடுதுறை மாவட்டம், அடியாமங்கலம் கிராமத்தில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒருவரின் வாரிசுதாரருக்கு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அரசு வேலை வழங்க அரசு ஆணை பிறப்பித்திருந்தது.

அதன்படி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையில் பணியாற்றுவதற்கான கருணை அடிப்படை பணி நியமன ஆணையை, பாதிக்கப்பட்டவரின் வாரிசுதாரரிடம் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் நேரில் வழங்கி ஆறுதல் கூறினார்.

பங்கேற்ற அலுவலர்கள்

இந்தக் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துவடிவேல், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் (பொறுப்பு) மலைமகள், மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் ஹரிதரன் மற்றும் அனைத்து அரசுத் துறைகளின் முதன்மை அலுவலர்கள், துறைச் சார்ந்த பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மக்கள் குறைதீர் கூட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது, மாவட்ட மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அரசு இயந்திரம் மீண்டும் முழு வீச்சில் மக்கள் நலப் பணிகளில் இறங்கியுள்ளதை இன்றைய மனுக்கள்குவிந்த நிகழ்வு உறுதிப்படுத்தியுள்ளது.