மயிலாடுதுறை: தற்போது கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தத் தீவிர வெப்பம் மனிதர்களை மட்டுமல்லாது, கால்நடைகளின் ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித் திறனில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால், அவற்றைப் பாதுகாப்பதற்கான அவசர வழிமுறைகளை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த், வெளியிட்டுள்ளார்.

Continues below advertisement

வெப்ப அயற்சியின் அறிகுறிகள்

கோடைகாலங்களில் சுற்றுப்புற வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் மற்றும் ஈரப்பதம் 70 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்கும் போது, கால்நடைகளால் தங்கள் உடலில் உற்பத்தியாகின்ற வெப்பத்தை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் உடல் வெப்பநிலை உயர்ந்து 'வெப்ப அயற்சி' (Heat Stress) ஏற்படுகிறது.

வெப்ப அயற்சியால் பாதிக்கப்பட்ட கால்நடைகளிடம் பின்வரும் அறிகுறிகள் தென்படும்:

Continues below advertisement

* உடல் சோர்வு மற்றும் தீவனம் உண்ணாமை.

* நிழல் தரும் மரங்களைத் தேடி ஒதுங்கி இருத்தல்.

* வெப்பத்தைத் தணிக்க வாய் திறந்து நாக்கை வெளியே தொங்கவிட்டபடி உமிழ்நீர் வடித்தல்.

* வாய் வழியாக வேகமாக மூச்சுவிடுதல்.

பல்வேறு உயிரினங்களில் ஏற்படும் பாதிப்புகள்

வெப்ப அயற்சியானது கறவை மாடுகள் மற்றும் கன்றுகளை விரைவாகப் பாதிக்கும். இதனால் பால் உற்பத்தி கணிசமாகக் குறைவதோடு, மாடுகளின் சினை பிடிக்கும் திறனும் பாதிக்கப்படுகிறது. ஆடுகளைப் பொறுத்தவரை இறைச்சி உற்பத்தி குறைந்து, உடல் வளர்ச்சி குன்றும். பன்றிகளுக்கு வியர்வைச் சுரப்பிகள் இல்லாததால், வெப்பத்தினால் அவற்றின் உடல் எடை குறையும்.

கோழிகளில் வெப்ப அயற்சி காரணமாக இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பதோடு, உடல் எடையும் குறையும். வளர்ப்புப் பிராணிகளான நாய்கள் அமைதியின்றிக் காணப்படுவதோடு, தோல் வியாதிகள் ஏற்படும் நிலையும் உருவாகும். குறிப்பாக, கலப்பின மாடுகள் தற்போது அதிகம் பராமரிக்கப்படுவதால், வெப்ப அயற்சியால் நடுக்கம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.

பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு முறைகள்

கால்நடைகளை வெப்பத்திலிருந்து பாதுகாக்கப் பின்வரும் மேலாண்மை முறைகளை மேற்கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்:

1. மேய்ச்சல் நேரம்: கால்நடைகளைக் காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 5 மணிக்கு மேலும் மட்டுமே மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும். நீண்ட தூரம் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

2. குடிநீர் மேலாண்மை: கால்நடைகளுக்கு நாள் ஒன்றுக்கு 4 முதல் 5 முறை சுத்தமான தண்ணீர் வழங்க வேண்டும். ஒரு கறவை மாட்டிற்குச் சுமார் 40 முதல் 50 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். பால் கறக்கும் மாடுகளுக்கு ஒரு லிட்டர் பாலுக்குக் கூடுதலாக 5 லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டும். தண்ணீரில் குளுக்கோஸ், எலக்ட்ரால் பவுடர் அல்லது தாது உப்பு கலவைகளை (சுமார் 40 கிராம்) கலந்து கொடுக்கலாம்.

3. தீவன மேலாண்மை: பகல் நேரங்களில் பசுந்தீவனத்தையும், இரவு நேரங்களில் உலர் தீவனத்தையும் வழங்க வேண்டும். பொட்டாசியம் சத்து மிகுந்த கோதுமை தீவனம் மற்றும் வைட்டமின் நியாசின் (6 கிராம்) ஆகியவற்றை அடர் தீவனத்துடன் சேர்த்து அளிக்கலாம். கோழிகளுக்கு உச்சி வெயிலில் தீவனம் அளிப்பதைத் தவிர்த்து, அதிகாலை மற்றும் இரவில் மட்டும் தீவனம் அளிக்க வேண்டும்.

4.கொட்டகை பராமரிப்பு: கொட்டகையின் உட்புறம் தென்னங்கீற்று அல்லது பனை ஓலைகளை அமைத்து வெப்பத்தைக் குறைக்கலாம். மின் விசிறி, நீர் தெளிப்பான்கள் (Sprinklers) மூலம் குளிர்ச்சியை ஏற்படுத்தலாம். கொட்டகையைச் சுற்றி ஈரமான சாக்குகளைத் தொங்கவிடலாம். மேய்ச்சல் முடிந்து வரும் மாடுகளைத் தண்ணீரில் குளிக்க வைப்பது நல்லது.

போக்குவரத்து மற்றும் அவசர சிகிச்சை

அவசியமில்லாமல் கால்நடைகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத சூழலில், அதிகாலை அல்லது மாலை நேரங்களில் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும். வாகனங்களில் வழக்கமான எண்ணிக்கையை விடக் குறைவான மாடுகளை ஏற்றிச் செல்வதும், பயணத்தின் போது ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் வழங்குவதும் அவசியமாகும்.

கால்நடைகளுக்கு வெப்ப அயற்சி காரணமாக வலிப்பு அல்லது தீவிர அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அருகிலுள்ள கால்நடை மருந்தகத்தை அணுக வேண்டும். மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது செயல்பாட்டில் உள்ள '1962' என்ற அவசர கால்நடை மருத்துவச் சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், இது குறித்த விழிப்புணர்வு முகாம்கள் கால்நடை மருத்துவர்களால் நடத்தப்படும் என்றும், அதில் கால்நடை வளர்ப்போர் பங்கேற்றுப் பயனடைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.