மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள், 2026–27 கல்வியாண்டில் முதலாம் ஆண்டு கல்லூரி படிப்புகளில் சேர்வதற்கான சார்ந்தோர் சான்றிதழ் பெற மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
முன்னாள் படைவீரர்களின் குடும்பங்களை கல்வி வாயிலாக முன்னேற்றும் நோக்கில், அரசு சார்பில் பல்வேறு கல்விச் சலுகைகள் மற்றும் முன்னுரிமைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படும் “சார்ந்தோர் சான்று” (Dependent Certificate) தற்போது கல்லூரிகளில் சேர உள்ள மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்காக வழங்கப்பட உள்ளது. இந்தச் சான்றிதழ் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்கள் சேர வாய்ப்பு பெறுகின்றனர்.
இணையதளத்தில் விண்ணப்பப் படிவம்
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், முன்னாள் படைவீரர்கள் சார்ந்தோர் சான்று பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் விண்ணப்பப் படிவங்களை அதிகாரப்பூர்வ இணையதளமான Ex-Servicemen Welfare Portal exwel.tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்த பின்னர் தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சமர்ப்பிக்க வேண்டிய முக்கிய ஆவணங்கள்
சார்ந்தோர் சான்று பெற விண்ணப்பிக்கும் போது, கீழ்க்கண்ட ஆவணங்களை இணைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
* முன்னாள் படைவீரரின் ஓய்வூதிய ஆணை (Pension Order) நகல்
* படைவிலகல் சான்றிதழில் மாணவர் அல்லது மாணவியின் பெயர் இடம்பெறாத நிலையில், அதற்கான குடும்ப உறுப்பினர் சான்று அல்லது தொடர்புடைய ஆவணம்
* மாணவர் / மாணவியின் ஆதார் அட்டை நகல்
* பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல்
* விண்ணப்பப் படிவம் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட நகல்
இந்த ஆவணங்களுடன் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நேரில் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்திற்கு வருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நேரில் வர இயலாதவர்களுக்கு மாற்று வசதி
தொலைதூர பகுதிகளில் வசிப்பவர்கள் அல்லது நேரில் வர இயலாத முன்னாள் படைவீரர்களுக்காக மின்னஞ்சல் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு exwelnag@tn.gov.in அனுப்பி விண்ணப்பிக்கலாம் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதன் மூலம், முதியோர் மற்றும் உடல்நலக் குறைபாடு காரணமாக அலுவலகத்திற்கு நேரில் வர முடியாத முன்னாள் படைவீரர்களும் எளிதில் சான்றிதழ் பெறும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கல்வி வாய்ப்பை பயன்படுத்த வேண்டுகோள்
முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் உயர்கல்வியில் முன்னேற அரசு பல்வேறு சலுகைகள் வழங்கி வருவதாகவும், அந்த வாய்ப்புகளை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக, கல்லூரி சேர்க்கை காலம் தொடங்கியுள்ள நிலையில், மாணவர்கள் காலதாமதமின்றி விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்புக்கு உதவி எண்
மேலும் விவரங்கள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் இயங்கி வரும் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம். அல்லது, (04365-299765) என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் படைவீரர்களின் குடும்ப நலனில் அரசு தொடர்ந்து அக்கறை செலுத்தி வரும் நிலையில், இந்தச் சார்ந்தோர் சான்று வழங்கும் நடவடிக்கை மாணவர்களின் உயர்கல்வி பயணத்திற்கு பெரிதும் உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
