மயிலாடுதுறை: மயிலாடுதுறை பழைய பேருந்து நிலைய நுழைவு வாயில் அருகே நிகழ்ந்த கோர விபத்தில், கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவர் அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். பேருந்து நிலைய மாற்றத்திற்குப் பிறகு நிலவும் போக்குவரத்து குழப்பமே இந்த விபத்திற்குக் காரணம் என பொதுமக்கள் கொந்தளிப்புடன் தெரிவித்துள்ளனர்.

Continues below advertisement

சம்பவம் குறித்து விரிவான தகவல்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா, கொக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் ஒரு தனியார் ரப்பர் தொழிற்சாலையில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கனகவள்ளி (40). இந்நிலையில் பாண்டியன் தனது மனைவியுடன் வீட்டுத் தேவைகளுக்காக பொருட்கள் வாங்குவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் மயிலாடுதுறை நகரத்திற்கு வந்துள்ளார்.

பொருட்களை வாங்கிவிட்டு, இருவரும் பழைய பேருந்து நிலையப் பகுதி வழியாகச் சென்று கொண்டிருந்தனர். சரியாக பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் வெளியே வரும் பாதையில் அவர்கள் கடக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக அங்கு வந்த ஒரு அரசுப் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

Continues below advertisement

தலை நசுங்கிப் பலி

பேருந்து மோதிய வேகத்தில் பாண்டியனும், கனகவள்ளியும் நிலைதடுமாறி சாலையில் விழுந்தனர். இதில் துரதிர்ஷ்டவசமாக, கீழே விழுந்த கனகவள்ளியின் தலை மீது பேருந்தின் பின்சக்கரம் ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் கனகவள்ளி சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார். பாண்டியன் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தனது கண் முன்னே மனைவி உயிரிழந்ததைக் கண்டு அவர் கதறி அழுதது அங்கிருந்தவர்களைக் கண்கலங்கச் செய்தது.

போலீசார் விசாரணை

விபத்து குறித்துத் தகவலறிந்த மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிவசெந்தில்குமார் மற்றும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கனகவள்ளியின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்திற்குப் பின்னால் இருக்கும் 'பேருந்து நிலைய' சிக்கல்.

இந்த விபத்து தற்செயலானது அல்ல, இது நிர்வாகச் சீர்கேட்டினால் ஏற்பட்ட விபத்து என அப்பகுதி மக்களும் பயணிகளும் குற்றம் சாட்டுகின்றனர். விபத்தின் பின்னணியில் உள்ள காரணங்களாக மக்கள் கூறுவது:

* புதிய பேருந்து நிலைய மாற்றம்: மயிலாடுதுறையில் கடந்த 13-ம் தேதி புதிய பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டது. அதன் பின்னர் தற்காலிக பேருந்து நிலையம் மூடப்பட்டது.

*பழைய பேருந்து நிலையக் குழப்பம்: தற்போது டவுன் பஸ்கள் மட்டுமே பழைய பேருந்து நிலையத்திற்குள் சென்று வருகின்றன. ஆனால், புறநகர் பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத்திற்குச் சென்றுவிட்டு, மீண்டும் பழைய பேருந்து நிலையப் பகுதி வழியாகவே கடந்து செல்கின்றன.

* பயணிகள் அவதி: பெரும்பாலான புறநகர் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்திற்குள் நுழையாமல் சாலையிலேயே நின்று பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. இதனால், பயணிகள் எங்கே பேருந்து நிற்கும் என்று தெரியாமல் தலைமை தபால் நிலையம், கால்டாக்சி முக்கூட்டு, நகர பூங்கா சந்திப்பு மற்றும் பேருந்து நிலைய நுழைவாயில் பகுதிகளில் சாலையோரங்களில் கூட்டமாக நிற்கின்றனர். "முறையான அறிவிப்புகள் இன்றி பேருந்து நிலையத்தை மாற்றியதே இந்தக் குழப்பத்திற்குக் காரணம். பயணிகள் சாலையிலேயே நிற்பதால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நெரிசலில் சிக்கியே ஒரு உயிர் போயிருக்கிறது," என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பொதுமக்கள் கோரிக்கை

விபத்து நடந்த பகுதியில் அதிகப்படியான மக்கள் நடமாட்டம் இருப்பதாலும், பேருந்துகள் தாறுமாறாக இயக்கப்படுவதாலும் அடிக்கடி சிறிய விபத்துகள் ஏற்பட்டு வந்தன. இன்று ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு,

புறநகர் மற்றும் நகரப் பேருந்துகள் நிற்கும் இடங்களைத் தெளிவாக அறிவிக்க வேண்டும், பழைய பேருந்து நிலையப் பகுதியில் நிலவும் ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வேண்டும், பேருந்து நிலைய நுழைவு வாயில் பகுதிகளில் போக்குவரத்து காவலர்களைக் கொண்டு போக்குவரத்தைச் சீரமைக்க வேண்டும்.

இந்த விபத்து மயிலாடுதுறை மக்களிடையே பெரும் சோகத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இனியாவது அதிகாரிகள் விழித்துக்கொண்டு நடவடிக்கை எடுப்பார்களா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.