ஒடிசா மாநிலம் புவனேஸ்வரி நடைபெற்ற தேசிய அளவிலான சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த விவசாயி மகள் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.


27 -வது தேசிய பெடரேஷன் கோப்பை சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சாதித்த விவசாயி மகள்


27 -வது தேசிய பெடரேஷன் கோப்பை சீனியர் தடகள சாம்பியன்ஷிப் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில், கடந்த மே 14-ஆம் தேதி நடைபெற்ற பெண்களுக்கான போல் வால்ட் ( கோல் ஊன்றி உயரம் தாண்டுதல்) போட்டியில் மயிலாடுதுறையை சேர்ந்த விவசாயி மகள் பதக்கம் வென்றுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் சேத்திரபாலபுரத்தில் வசிக்கும் விவசாயி இளங்கோவன் என்பவரது மகள் 27 வயதான பரணிகா. இவர் தற்போது ரயில்வே துறையில் எழுத்தராக பணியாற்றி வருகிறார். வால்ட் வீராங்கனையான பரணிகா 4 மீட்டர் உயரம் தாண்டி, இரண்டாவது இடம் பிடித்து, வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.


இந்த போட்டியில் பரணிகா பங்கேற்ற வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தின் ரோசி மீனா 4.05 மீட்டர் உயரம் தாண்டி முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.




குவியும் பாராட்டுகள்


வெற்றி பெற்ற பரணிகாவுக்கு பயிற்சியாளர், ரயில்வே துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பரணிகா ஏற்கெனவே தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் மாநிலங்களுக்கு இடையிலான 61 -வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ( இன்டர் - ஸ்டேட் அத்லெட்டிக் நேஷனல் சாம்பியன்ஷிப் 2022 ) ஜூன் 10 -ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற போல் வால்ட் எனப்படும், கோல் ஊன்றி உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்ற போட்டியில், 4.05 மீட்டர் உயரம் தாண்டி புதிய சாதனையை படைத்துள்ளார். 




மேலும் பல சாதனைகள்


இதேபோன்று  கடந்த ஆண்டு கோவாவில் நடைபெற்ற 37 -வது தேசிய விளையாட்டுப் போட்டியில் மயிலாடுதுறை மாவட்ட போல் வால்ட் வீராங்கனை பரணிகா தங்கப்பதக்கம் வென்றார்.


இந்தியாவில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உயரிய போட்டியான தேசிய விளையாட்டுப் போட்டியின் 37 -வது போட்டி கோவாவில் உள்ள பேம்புலிம் ஸ்டேடியத்தில் கடந்த ஆண்டு நடைபெற்றது. இதில் போல் வால்ட் எனப்படும் கோல் ஊன்றி உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்க இந்தியாவின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த வீராங்கனைகள் விண்ணப்பித்து, அதில் இந்தியன் ஒலிம்பிக் அசோசியேஷன் மூலமாக 14 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இப்போட்டியில் பரணிகா கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவர் 3.90 மீட்டர் உயரம் தாண்டி இந்த வெற்றியை பெற்றார். 




நாட்டிற்கு பெருமை சேர்ப்பதே தன்னுடைய ஆசை


குத்தாலம் பழையகூடலூர் பள்ளியில் படித்தபோதே  ஓட்டப்பந்தயம், தூரம் தாண்டுதல் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை பரணிகா பெற்றுள்ளார். பின்னர் சென்னை எத்திராஜ் கல்லூரியில் பி.காம், நுங்கம்பாக்கம் எம்.ஓ.பி வைஷ்ணவ் கல்லூரியில் எம்.காம் பயின்றுகொண்டே போல்வால்ட் கோச் மில்பர் என்பவரிடம் பயிற்சி பெற்ற பரணிகா தற்போது இந்த சாதனையை படைத்துள்ளார். இவரது விளையாட்டுத்துறையில் படைத்த சாதனைகள் காரணமாக ரயில்வே துறையில் சென்னையில் எழுத்தர் பணி கிடைத்து அங்கு பணியாற்றி வருகிறார். ஆசிய அளவில் நடைபெறவுள்ள  போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்ப்பதே தன்னுடைய ஆசை என்றும், அதற்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு உள்ளதாகவும்  பரணிகா தெரிவித்துள்ளார். மேலும்  தங்களைப் போன்றோருக்கு விளையாட்டு ஆர்வலர்கள் உதவி செய்தால் இன்னும் மேன்மேலும் பல சாதனைகளை படைக்க உறுதுணையாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்