மயிலாடுதுறை அருகே திருமண ஆன 3 மாதத்தில் பெண் உயிரிழந்ததை அடுத்து கோட்டாட்சியர் விசாரணையை மேற்கொண்டுள்ளார்.
 


காதல் திருமணம் செய்துக்கொண்ட பெண் 3 மாதத்தில் உயிரிழப்பு


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நரசிங்கம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் திவ்யராஜ் - ஆரோக்கியசெல்வி தம்பதியினர். இவர்களுக்கு நான்கு 4 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மூன்றாவது மகள் 23 வயதான பட்டதாரி ஜெனிபர், இவரும்  இவர்களது உறவினரான மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா செங்குடி கிராமத்தை சேர்ந்த சவுரிராஜ் - இருதயமேரி தம்பதியினரின் மகன் மார்ட்டின் ராஜ் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார்.  இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இருவருக்கும் திருமணம் செய்ய மார்ட்டின் ராஜ் குடும்பத்தினர் பேசியபோது 2 -வது மகளுக்கு திருமணம் செய்யாமல் 3 -வது மகள் ஜெனிபருக்கு திருமணம் செய்ய பெற்றோர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். அதற்கு பெண்ணை மட்டும் கொடுத்தால் போதும், சீர்வரிசை எதுவும் வேண்டாம் என்று கூறி மார்ட்டின் ராஜ் கடந்த பிப்ரவரி மாதம் 9-ம் தேதி ஜெனிபரை திருமணம் செய்துள்ளார். இரண்டாவது மகள் திருமணம் முடிந்தவுடன் சீர்வரிசை செய்வதாக ஜெனிபரின் பெற்றொர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர்.




சீர்வரிசை பொருட்களுடன் ஒப்பீடு செய்த மாமியார்


இந்நிலையில் திருமணம் முடிந்து பத்து நாட்கள் மட்டுமே மணப்பெண் ஜெனிபருடன் குடும்பம் நடத்திய மார்ட்டின்ராஜ் அப்போதே மலேசியாவிற்கு வேலைக்கு சென்றுவிட்டார். இந்த சூழலில் ஜெனிபரின் அக்காவுக்கு நேற்று முன்தினம் 19-ம் தேதி குடவாசல் அருகே பருத்தியூர் தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு ஜெனிபர், அவரது மாமியார் இருதயமேரி, நாத்தனார் லவன்சியாமேரி ஆகியோர் சென்றுள்ளனர். அப்பொழுது ஜெனிபரின் அக்காவிற்கு கொடுக்கப்பட்ட சீர்வரிசை பொருட்களை அவர்களது செல்போனில் புகைப்படம் எடுத்த மாமியாரும், நாத்தனார் ஜெனிபரிடம் உனக்கு சீர்வரிசை எதுவும் செய்யவில்லை என்று அங்கேயே கடும் சண்டையிட்டு ஜெனிபரை ஊருக்கு அழைத்து சென்றுவிட்டனர்.




அதனைத் தொடர்ந்து நேற்று இரவு தனது வீட்டிற்கு தொலைபேசியில் பேசிய ஜெனிபர் அக்காவிற்கு மட்டும் இவ்வளவு சீர்வரிசை பொருட்களை உன் குடும்பத்தார் செய்துள்ளனர், உனக்கு மட்டும் ஏன் சீர்வரிசை எதுவும் செய்யவில்லை என சொல்லி கொடுமைப்படுத்தி தாக்கியதாக தொலைபேசியில் தெரிவித்துள்ளார். அப்போது ஜெனிபர் பேசிக்கொண்டு இருக்கும்போதே தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பதற்றம் அடைந்த ஜெனிபர் குடும்பத்தினர் தங்கள் மகனை ஜெனிபர் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். அங்கு ஜெனிபர் பேச்சு மூச்சு இன்றி மயங்கி கிடந்துள்ளார். 




கோட்டாச்சியர் விசாரணை


உடனே அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமணைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே ஜெனிபர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஜெனிபரின் சாவுக்கு காரணமான அவரது மாமியார் இருதயமேரியை கைது செய்ய வலியுறுத்தி ஜெனிபரின் உடலை வாங்க மறுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் மயிலாடுதுறை மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் சீர்காழி கோட்டாட்சியர் பொறுப்பு அர்ச்சனா நேரில் ஜெனிபர் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் ஜெனிபரின் உடல் உடற்கூறு ஆய்வு செய்ய அனுமதித்தனர். 2 வது மகள் திருமணநாளில் காதல் திருமணம் செய்த 3 -வது மகள் வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.