மயிலாடுதுறை: வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை மற்றும் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கு திசையில் நகரும். அதே சமயம், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகி, அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Continues below advertisement

டெல்டாவில் அபாயம்: மயிலாடுதுறைக்கு கனமழை எச்சரிக்கை

இந்த வானிலை மாற்றங்களின் தாக்கத்தால், டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகியவற்றில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால், பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை

கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் மழை பாதிப்புகளை எதிர்கொள்வதற்கான தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் பேரில், அனைத்துத் துறை அதிகாரிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மழை நீர் தேக்கம், வெள்ளப்பெருக்கு, மரம் விழுதல், மின் தடையை சரிசெய்தல் போன்ற அவசர காலப் பணிகளை மேற்கொள்ளத் தேவையான உபகரணங்கள் மற்றும் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக தங்க, வெள்ள நிவாரண முகாம்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

Continues below advertisement

பொதுமக்களுக்கான அவசரத் தொடர்பு எண்கள் அறிவிப்பு

பேரிடர் தொடர்பான புகார்கள் மற்றும் உதவிகளைப் பொதுமக்கள் உடனடியாக தெரிவிப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு, அவற்றின் தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்ட பொதுமக்கள் மழை பாதிப்புகள், வெள்ளம், மரம் விழுதல், மின்சாரம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து பின்வரும் எண்களில் உடனடியாகத் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

* மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்கள்:

   * 1077

   * 04364-222588

   * 7092255255

* மயிலாடுதுறை நகராட்சி கட்டுப்பாட்டு அறை எண்: 04364-222555

 * சீர்காழி நகராட்சி கட்டுப்பாட்டு அறை எண்: 04364-240566

 * நீர்வளத்துறை கட்டுப்பாட்டு அறை எண்: 04364-222315, 225904

 * தீயணைப்புத்துறை எண்: 04364-222101

 * காவல்துறை எண்: 9442626792

 * மின்சார வாரியம் கட்டுப்பாட்டு அறை எண்: 04364-252218, 279301

 * சுகாதாரத்துறை எண்: 9443188904

 * நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டு அறை எண்: 04364-222277

பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதைத் தவிர்க்குமாறும், அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் வெளியே செல்லுமாறும், பாதுகாப்பான முறையில் இருக்குமாறும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், அரசின் அறிவிப்புகளையும், வானிலை நிலவரங்களையும் தொடர்ந்து கவனிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.