ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயில் சேவையில் மாற்றம்... இதோ முழு விபரம்...!

மதுரை ரயில்வே கோட்டத்தில் பொறியியல் பணி மேற்கொள்ளப்படுவதால் சில ரயில் சேவைகளில் வழித்தட மாற்றம் மற்றும் நேரமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Continues below advertisement

மதுரை ரயில்வே கோட்டத்தில் நடைபெறவுள்ள அத்தியாவசிய பொறியியல் பணிகளை மேற்கொள்வதற்காக, சில முக்கிய ரயில் சேவைகளின் வழித்தடங்களிலும், நேரத்திலும் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் குறித்து ரயில் பயணிகளின் கவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

ரயில்வே செய்திக்குறிப்பு 

இதுதொடர்பாக திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகம் சார்பில் இன்று (07.04.2025) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், செங்கோட்டை - மயிலாடுதுறை மற்றும் மயிலாடுதுறை - செங்கோட்டை ஆகிய இரு முக்கிய விரைவு ரயில் சேவைகளின் வழித்தடங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மதுரை - பிகானேர் அனுவரத் ஏசி அதிவிரைவு ரயில் புறப்படும் நேரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வழித்தடம் மாற்றம் செய்யப்பட்ட ரயில் சேவைகள்

 

  • ரயில் எண்: 16848 செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயில்:

 

இந்த ரயில், ஏப்ரல் 10 -ம் தேதி 2025 -ம் தேதி செங்கோட்டையில் இருந்து காலை 06.55 மணிக்கு புறப்படும். வழக்கமாக விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சிராப்பள்ளி வழியாக மயிலாடுதுறை செல்லும் இந்த ரயில், தற்காலிகமாக காரைக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை சந்திப்பு, கோடைக்கானல் ரோடு, திண்டுக்கல் சந்திப்பு, வடமதுரை, வையம்பட்டி மற்றும் மணப்பாறை ஆகிய நிலையங்களில் நிற்காது.

மாறாக, அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை மற்றும் காரைக்குடி ஆகிய புதிய நிறுத்தங்களில் நின்று செல்லும். இந்த மாற்றத்தின் மூலம், மேற்கண்ட நிறுத்தங்களில் ஏறும் பயணிகள் தங்களது பயணத்தை மாற்று ஏற்பாடுகள் மூலம் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை ஆகிய ஊர்களைச் சேர்ந்த பயணிகள் இந்த ரயில் சேவையை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

ரயில் எண்: 16847 மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயில்

இந்த ரயில், ஏப்ரல் 30, 2025- ம் தேதி மயிலாடுதுறையில் இருந்து பிற்பகல் 12.10 மணிக்கு புறப்படும். வழக்கமாக திருச்சிராப்பள்ளி, காரைக்குடி, மானாமதுரை மற்றும் விருதுநகர் வழியாக செங்கோட்டை செல்லும் இந்த ரயில், தற்காலிகமாக மணப்பாறை, வையம்பட்டி, வடமதுரை, திண்டுக்கல் சந்திப்பு, கோடைக்கானல் ரோடு, மதுரை சந்திப்பு, திருப்பரங்குன்றம், திருமங்கலம் மற்றும் காரைக்குடி ஆகிய நிலையங்களில் நிற்காது. 

மாறாக, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய புதிய நிறுத்தங்களில் நின்று செல்லும். இந்த மாற்றமானது, புதுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பயணிகளுக்கு செங்கோட்டை செல்லும் நேரடி ரயில் சேவையை வழங்குகிறது. அதே சமயம், வழியில் உள்ள சில முக்கிய நிறுத்தங்களில் இந்த ரயில் நிற்காது என்பதை பயணிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நேரம் மாற்றம் செய்யப்பட்ட ரயில் சேவை:

 

ரயில் எண்: 22631 மதுரை - பிகானேர் அனுவரத் ஏசி அதிவிரைவு

இந்த ரயில், 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி மதுரை சந்திப்பில் இருந்து பிற்பகல் 12.05 மணிக்கு புறப்படவிருந்தது. தற்போது, இந்த ரயிலின் புறப்படும் நேரம் 40 நிமிடங்கள் தாமதப்படுத்தப்பட்டு, பிற்பகல் 12.45 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைதூர பயணமான பிகானேருக்கு செல்லும் இந்த ரயிலின் நேர மாற்றத்தை பயணிகள் கவனத்தில் கொண்டு, தங்களது பயணத்தை அதற்கேற்ப திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்த வழித்தட மற்றும் நேர மாற்றங்கள் அனைத்தும் மதுரை ரயில்வே கோட்டத்தில் நடைபெறவிருக்கும் அத்தியாவசிய பொறியியல் பணிகளின் காரணமாக மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பணிகள் ரயில் பாதைகளை மேம்படுத்தவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் மிகவும் முக்கியமானவை என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த பணிகள் முடிந்தவுடன், சம்பந்தப்பட்ட ரயில் சேவைகள் அனைத்தும் வழக்கமான வழித்தடங்களிலும், நேரங்களிலும் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த குறிப்பிட்ட தேதிகளில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ள பயணிகள், தங்களது பயண ஏற்பாடுகளை மேற்கண்ட மாற்றங்களுக்கு ஏற்ப சரிசெய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு தெற்கு ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தையோ (https://sr.indianrailways.gov.in/) அல்லது139 என்ற உதவி எண்ணையோ தொடர்பு கொள்ளலாம். 

Continues below advertisement
Sponsored Links by Taboola