மயிலாடுதுறை திருவாரூர் வழித்தடத்தில் இயங்கிய பேருந்தில் இரவு வேலையில் விளக்குகள் எரியாததால் பயணிகள் கடும் இன்னலுக்கு ஆளாகி அச்சத்துடன் பயணம் மேற்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு பேருந்துகள் குறித்த விமர்சனங்கள் 


சமீப காலமாக தமிழகத்தில் அரசு பேருந்துகள் மிகவும் சேதம் அடைந்து, பயணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையில் ஓடுவதும், அதனை பொதுமக்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு, விமர்சனம் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. சமீபத்தில் அரசு பேருந்து ஒன்றின் பின்பக்க கண்ணாடிகள் இன்றி சென்றது, செல்லும் வழியில் படிக்கட்டு தனியாக கழண்டு விழுந்தது, கோடை மழையின் போது பேருந்தில் உள்ளே சரசரவென மழை பெய்தது, பேருந்தின் சக்கரம் தனியாக கழண்டு ஓடியது என அரசு பேருந்துகள்  தொடர் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. மேலும் அரசு அவ்வபோது புதிய பேருந்துகளை வாங்கி மக்கள் போக்குவரத்து துறைக்கு வழங்கினாலும், அதனை தொடர்ந்து பராமரிப்பு செய்கிறார்களா என்றால் அது கேள்வி குறியாக தான் இருந்து வருகிறது.

 



இருளில் பயணிந்த பொதுமக்கள் 


இந்நிலையில் அதற்கு எடுத்துக்காட்டாக மற்றொரு சம்பவமாக தற்போது மீண்டும் நடைபெற்று உள்ளது. மயிலாடுதுறை - திருவாரூர் வழித்தடத்தில் ஓடும், திருவாரூர் பணிமனையை சேர்ந்த TN 68 N 0483 என்ற எண் கொண்ட அரசு பேருந்து மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று மாலை ஆறு மணியளவில் புறப்பட்டு திருவாரூர் நோக்கி பயணிகளுடன் சென்றுள்ளது. மாலை வேலை என்பதால், பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என ஏராளமானோர் அதில் பயணம் மேற்கொண்டனர். அப்போது பேருந்து செல்ல செல்ல இருள் சூழல துடங்கியதும், பேருந்து முழுவதும் இருளில் மூழ்கியது. 



 

இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அதுவும் குறிப்பாக பெண் பயணிகள் அனைவரும் அச்சத்தில் ஆழ்ந்தனர். பொதுவாக பேருந்துகளில் கூட்டம் காரணமாக திருட்டு சம்பவங்கள் நடைபெறும் வேளையில், திருடர்களுக்கு சாதகமாக பேருந்து இருளில் இயக்கப்பட்டுள்ளதாக பயணிகள் தெரிவித்தனர். மேலும் பேருந்து நடத்துனரும் வெளிச்சம் இல்லாததால் பணிகளுக்கு பயணிக்கு பயண சீட்டு வழங்க முடியாமல் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் இருளில் லைட் வெளிச்சம் இன்றி இயக்கப்பட்ட பேருந்தை பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் அந்த வீடியோ வைரலாகி வருகிய நிலையில் பல்வேறு தரப்பினரிடம் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

 



சமூக ஆர்வலர்களின் கருத்து 


இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து அதற்கான விதிகளையும் ஒதுக்கீடு செய்கிறது. மேலும் பேருந்து வசதிகளுக்காக அவ்வப்போது ஆயிரக்கணக்கில் புதிய பேருந்துகளை வாங்கி வருகிறது. இருந்த போதிலும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஓடும் பேருந்துகள் முற்றிலும் சாலையில் ஓட தகுதியற்ற நிலையில் இருக்கின்றது. அதற்கு உதாரணமாக பல்வேறு நிகழ்வுகள் தற்போது நடைபெற்று அவைகள் விமர்சனத்திற்கு உள்ளாகிறது‌.  இவற்றையெல்லாம் அரசு கருத்தில் எடுத்துக் கொண்டு உடனடியாக சாலையில் ஓட தகுதியற்ற பேருந்துகளை அனைத்தையும் அகற்றிவிட்டு பேருந்துகளை புதிய பேருந்துகளாக மாற்றி தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.