வணிக நோக்கில் கட்டப்படும் அனைத்து கட்டிடங்களிலும் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளனவா? - மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி







 

பாதுகாப்பு இல்லா கட்டிடங்களை கட்டி பொதுமக்களின் வரிப்பணத்தை ஏன் விரையம் செய்கிறீர்கள்?-  நீதிபதிகள் கேள்வி

 

விபத்தும், இழப்பும் ஏற்படுவதற்கு முன்பு  முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என இந்த நீதிமன்றம் கருதுகிறது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

 

மதுரை மாவட்டம், பி.பி.குளத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்  பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை மாவட்டம், மீனாட்சி அம்மன் கோயில் அருகே உள்ள புதுமண்டபத்திலுள்ள கடைகள் அனைத்தும் புதிதாக கட்டப்பட்டுள்ள குன்னத்தூர் சத்திர கட்டிடத்திற்கு மாற்றப்பட உள்ளது. 2006ஆம் ஆண்டு 20 கடைகளுடன் செயல்பட்டு வந்த குன்னத்தூர் சத்திர கட்டிடம் இடிக்கப்பட்டு தற்போது புதிதாக 200 கடைகளுடன் கட்டப்பட்டுள்ளது. தற்போது புதுமண்டபத்தில் செயல்பட்டு வரும் 300 கடைகள், ஏற்கனவே குன்னத்தூர் சத்திரத்தில் செயல்பட்ட 20 கடைகள் என சேர்த்து, புதிதாக கட்டப்படும் கட்டிடத்தில் கடைகள் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது கட்டப்பட்டுள்ள குன்னத்தூர் சத்திரம் கட்டிடத்தில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் பின்பற்றப்பட்டு கட்டப்படவில்லை. புதிதாக கட்டப்பட்டுள்ள குன்னத்தூர் சத்திர கட்டிடத்தில் 200 கடைகள் மட்டும் கட்டப்பட்டுள்ள நிலையில், அதில் 300 கடைகள் அமைந்தால் விசேஷ நேரங்களில் அதிகமான மக்கள் கூடுவதற்கான வாய்ப்பு உள்ளது.

 

அதேநேரத்தில் கட்டிடத்திற்கு செல்ல ஒரு வழிபாதை மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அவசர வழிகள் அமைக்கப்படவில்லை. மேலும் முறையான வாகனம் நிறுத்துமிட  வசதிகள் செய்யப்படவில்லை. 300 கடைகள் செயல்பட உள்ள கட்டிடத்தில் 100 இருசக்கர வாகனங்கள் மட்டுமே நிறுத்துவதற்கான இடம் உள்ளது. தீ விபத்து ஏற்பட்டால் தடுப்பதற்கான முறையாக பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. எனவே, புதிதாக கட்டப்பட்டுள்ள குன்னத்தூர் சத்திர கட்டிடத்தில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும், அதுவரை குன்னத்தூர் சத்திர கட்டிடத்தை திறக்க தடை விதித்தும்  உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

 

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், வணிக நோக்கில் கட்டப்படும் கட்டிடத்தில் கண்டிப்பாக அவசர வழி அமைக்கப்பட வேண்டும். முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்" என வாதிடப்பட்டது. அப்போது நீதிபதிகள், கட்டிட அனுமதி பெற்று கட்டிடம் கட்டப்படும் பொழுது வழக்கை தாக்கல் செய்திருக்க வேண்டும். கட்டிடம் முழுமையாக கட்டிய பின் தற்போது வழக்கு தாக்கல் செய்யப்படுவது ஏன்? வணிக நோக்கில் கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டிடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செயல்படுத்தப் பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினர்.

 

மேலும் பாதுகாப்பு இல்லா கட்டிடங்களை கட்டி பொதுமக்களின் வரிப்பணத்தை ஏன் விரையம் செய்கிறீர்கள்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், புதிதாக கட்டப்பட்டுள்ள குன்னத்தூர் சத்திர கட்டிடம் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கட்டப்பட்டுள்ளதா? இல்லையெனில், அந்த கட்டிடத்தை என்ன செய்வதாக திட்டம்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் விபத்தும், இழப்பும் ஏற்படுவதற்கு முன்பு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் இந்த நீதிமன்றம் கருதுகிறது என கூறி வழக்கு குறித்து மதுரை மாநகராட்சி ஆணையர் 2 வாரத்திற்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கினை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.