கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூரைச்சேர்ந்த வேல்முருகன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், அதில், "நாகர்கோவிலில் உள்ள எஸ்.எல்.பி. பெண்கள் உயர்நிலைப்பள்ளியானது, திருவிதாங்கூர் சமஸ்தானத்தால் தொடங்கப்பட்ட பழமையான பள்ளி. கல்வி மற்றும் விளையாட்டில் இந்த பள்ளி சிறந்து விளங்குவதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்களும் இங்கு வந்து படிக்கின்றனர். நகரின் மையப்பகுதியில் 4.2 ஏக்கர் பரப்பளவில் இந்த பள்ளி அமைந்திருந்தது. இங்கு பெரிய மைதானம் இருந்தது. இந்தநிலையில் அந்த மைதானத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம்,  மாவட்ட கல்வி அலுவலகம், தண்ணீர் தொட்டி போன்றவற்றை அரசாங்கம் கட்டியது. இதனால் தற்போது இந்த பள்ளி வெறும் 50 சென்ட் நிலத்தில் தான் இயங்கி வருகிறது. பள்ளியின் இடம் சுருங்கியதால் இங்கு படிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது. 


இதுமட்டுமல்லாமல் இந்த பள்ளி மைதானத்தில் அரசு குழந்தைகள் காப்பகம், குழந்தைகள் நல அலுவலகம் ஆகியவற்றை கட்டுவதற்கு முயற்சிகள் நடக்கின்றன. அந்த கட்டிடங்கள்  கட்டப்பட்டால் பள்ளியில் படிப்பவர்களின் கல்வி மற்றும் உடற்கல்வி பாதிக்கப்படும். இது அடிப்படை உரிமையை பறிப்பதாக அமையும்.எனவே நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளி மைதானத்தில் குழந்தைகள் நல காப்பகம், குழந்தைகள் நல அலுவலகம் கட்டுவதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்."என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு  விசாரணைக்கு வந்தது.


அப்போது நீதிபதிகள், பள்ளிகளுக்கு எவ்வளவு பரப்பளவில் இடங்கள் இருக்க வேண்டும்?அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என தனித்தனியே விதி முறைகள் உள்ளனவா? என கேள்வி ஏழுப்பினர்.பள்ளி கட்டிடங்கள் நெருக்கடியாக இருந்ததால் தான் கும்பகோணத்தில் 92 குழந்தைகளின் உயிரை இழந்தோம் என கருத்து தெரிவித்து. வழக்கு குறித்து தமிழ்நாடு அரசின் கல்வித்துறை செயலரிடம் தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 4ம் தேதி ஒத்தி வைத்தனர்.