மூன்றும் மகன்கள் மீது பாசம்


 

சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம் அருகே உள்ள வெளியாரி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மனைவி முத்துக்காளி அம்மாள். இவர்களுக்கு சண்முகநாதன், சரவணன், சந்தோஷ் குமார் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சண்முகநாதன் புதுக்கோட்டையில் சூடம் மற்றும் பூஜை பொருட்கள் தயாரிக்கும் கம்பெனியும், 2-வது மகன் சரவணன் மற்றும் 3 வது மகன் சந்தோஷ்குமார் ஆகியோர் சிங்கப்பூரில் பணி செய்து வருகின்றனர். இவர்கள் தங்கள் தாயின் வளர்ப்பால் தான் இவ்வளவு உயர்ந்த நிலையை அடைந்துள்ளோம் என்றும், இவர்களது தாயார் முத்துக்காளியம்மாள் தனது 3 மகன்களையும் படிக்க வைக்க கஷ்டபட்டதாகவும், மேலும் தனது மகன்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தவர், என்றும் சொல்லப்படுகிறது. 

 



 

அம்மாவிற்கு கோயில் கட்டிய மகன்கள்


 

கடந்த 2021-ம் ஆண்டு தனது 63 வயதில் முத்துக்காளி அம்மாள் உடல்நலக்குறைவால் காலமானார். தாய் இறந்தது முதல், சோகத்தில் வாழ்ந்து வந்த மகன்கள் தங்கள் தாய் மீது கொண்டுள்ள பாசத்தை வெளிப்படுத்த கருவில் சுமந்து தங்களை கரை சேர்த்த தாய்க்கு பெருமை சேர்க்க சொந்த ஊரில் கோயில் கட்ட முடிவு செய்தனர். அதன்படி கட்டட கலைஞர்கள், கைவினை கலைஞர்கள் ஆகியோருடன் ஆலோசித்து தாய்க்கு சுமார் ரூ.1 கோடி செலவில் கோயில் கட்டினர். இந்த கோயிலில் தங்கத்தால் செய்யப்பட்ட கலசம் பொருத்தப்பட்டு இன்று ரூ.1 கோடி செலவில் கும்பாபிஷேகம் நடத்தினர். பழங்கால வேலைப்பாடுகளுடன் கோயில் கட்டப்பட்டுள்ளது. அம்மாவின் மகத்துவத்தை விளக்கும் வகையில் கோயில் கருவறையில் 580 எடையில்  தாய்க்கு 5 அடி உயர ஐம்பொன் சிலையை பிரதிஷ்டை செய்து இன்று கும்பாபிஷேகவிழா நடைபெற்றது. யாக சாலைகள் அமைத்து நான்கு கால பூஜைகளுடன் யாக வேள்வி நடத்தி வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க, நாதஸ்வரம் செண்டைமேளம் ஒலிக்க, கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. யாகசாலையில் இருந்து கலசங்கள் கோபுரத்திற்கு கொண்டு சென்று புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் உறவினர்கள் கிராம மக்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.



 

 

கடவுளான அம்மாவுக்கு கோயில்


 

இதுகுறித்து முத்துக்காளி அம்மாளின் மகன்கள் கூறுகையில், "எங்கள் மிகவும் கஷ்டப்பட்டு எங்களை படிக்க வைத்தார். கல்லூரிக்கு செல்ல பஸ் டிக்கெட் எடுக்க பசுமாட்டின் பால், தயிரை விற்று பணம் கொடுப்பார். கல்லூரி கட்டணம் செலுத்த கழுத்தில் அணிந்திருந்த தாலியை கூட அடகு வைத்து பணம் கொடுத்தார். அதை நினைத்து பார்க்கும் போது இன்றைக்கும் கண்ணீர் வருகிறது. அடுத்த தலைமுறைக்கு எங்கள் அம்மா பட்டகஷ்டங்கள் தெரிய வேண்டும் என்பதற்காகவே எங்களின் முதல் கடவுளான அம்மாவுக்கு கோயில் எழுப்பப்பட்டுள்ளது” என்றனர்.

 

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - உலகில் சமத்துவம் நிலவ மதுரையில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை