மேய்ச்சல் நிலங்கள் கல்வெட்டுக்கள், விவசாயம் ஆகியவற்றை பாதிக்கும் வகையிலான மதுரை கல்லங்காடு பகுதியில் சிப்காட் அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி 18கிராம மக்கள்  சார்பில்  மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்கப்பட்டுள்ளச்து
 
25 கோயில்களும் சிதையும் ஆபத்து உள்ளது
 
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் வஞ்சிநகரம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்லாங்காடு பகுதியான பூதமங்கலம் மற்றும் கொடுக்கம்பட்டி ஊராட்சிகளில்  சில பகுதிகளை இணைத்து 279 ஏக்கரில் சிப்காட் அமைக்கும் திட்டத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.  தற்போது அந்தப் பகுதியில் அளவிடும் செய்யும் பணிகள் ட்ரோன் மூலமாக தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கல்லாங்காடு பகுதியில் சிப்காட் அமைந்தால் மேய்ச்சல் தொழில் பாதிக்கப்படும் எனவும்,  மழை நீரானது சுற்று வட்டார பகுதியில் கண்மாய்க்களுக்கு செல்வது  தடைபட்டு  விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்காத நிலை உருவாகும்  எனக்கூறியும்,  மேலும் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட  அழகு நாச்சியம்மன், சிவன் கோயில், பெருங்காட்டு கருப்பு கோயில்கள் உட்பட 25 கோயில்களும் சிதையும் ஆபத்து உள்ளதாகவும், கோயில்காடுகளும், கல்வெட்டுக்களும், பெருங்கற்கால சின்னங்களும் அழியும் நிலை உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
 
பல்லுயிர் தளமாக அறிவிக்க வேண்டும்
 
 மதுரை மேலூர் கல்லாங்காடு பகுதியில் அமையவுள்ள சிப்காட் திட்டத்தினை தமிழக அரசு கைவிட வலியுறுத்தி 18கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள்  மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கூடிய கிராமத்தினர் கல்லாங்காடு சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கூறியும், கல்லாங்காடு சுற்றுவட்டார பகுதியை பல்லுயிர் தளமாக அறிவிக்க வேண்டும் என கூறியும் கையில் பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
 
சிப்காட் அமைக்கும் திட்டத்தினை தமிழக அரசு கைவிட வேண்டும்
 
இதை குறித்து பேசிய கிராமத்தினர் கல்லாங்காடு பகுதியில் மேய்ச்சல் தொழில் ,விவசாயம் மற்றும் பல்வேறு கண்மாய்கள் உள்ளதால் சிப்காட் தொழில்கூடங்கள அமைந்தால் ரசாயன தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு அதனால் விவசாய நிலங்கள் அழிந்து எங்களது வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்படும் எனவும்,  மதுரை கல்லாங்காடு பகுதியில் சிப்காட் அமைக்கும் திட்டத்தினை தமிழக அரசு கைவிட வேண்டும் எனவும் அப்பகுதியை  பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் தளமாக  அறிவிக்க வேண்டும் என தெரிவித்தனர்