"நிதிஷ் குமார் போல் அல்ல; எந்த நெருக்கடியும் இல்லாமல் முதல்வர் பதவியை துறந்தவர் காமராஜர்" - திருமாவளவன்
முதல்வர் பதவிக்காக கூட்டணியை விட்டு விலகிச் சென்ற நிதீஷ் குமார் போல் அல்லாமல் எந்த நெருக்கடியும் இல்லாமல் முதல்வர் பதவியை துறந்தவர் காமராஜர் - விசிக தலைவர் தொல் திருமாவளவன் பேச்சு
Continues below advertisement
திருமாவளன்
மதுரை எஸ்.வி.என்., கல்லூரியில் நாடார் மகாஜன சங்கத்தின் 72- வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் எம்.பி., திருமாவளவன் உரையாற்றினார்.
”பெருந்தலைவர் காமராஜரை பற்றி உங்கள் இடத்தில் பேசுவது கொல்லர் தெருவில் ஊசி விற்பதை போன்றது. என்னை விட மகாஜன சங்கத்தின் வயது அதிகம் 72வது ஆண்டாக இந்த மாநாடு நடை பெறுகிறது. இந்த மாநாட்டின் நோக்கம் நாடார் சமுதாயத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்ற கருப்பொருளை வரவேற்கிறேன். திருச்சியில் நடைபெற்ற விசிக மாநாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் ஒவ்வொரு சமூகத்திலும் உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அரசுத் துறையிலும் அரசியலிலும் சரியான முறையில் இட ஒதுக்கீடு வழங்க முடியும்.
எனவே ஒன்றிய அரசு விரைந்து சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என வெல்லும் ஜனநாயக மாநாட்டில் விசிக கோரிக்கை வைத்துள்ளது என்றார். நாடார் சமூகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏற்கனவே நாடார் சமூகத்தைச் சேர்ந்த மூன்று முக்கிய நிர்வாகிகளை அறிவித்துள்ளது. பிற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக விசிகவில் இணையும் போது அவர்களுக்கான பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் திமுக,அதிமுகவில் உள்ளது போல விசிகவில் பெரும்பாலானோர் இல்லை என்பது எதார்த்தமான உண்மை. பிரதிநிதித்துவம் என்பது எல்லா தளங்களிலும் தேவைப்படுகிறது.இதுதான் சமூக நீதி நாடார் சமுதாயத்திற்கு எல்லா அரசியல் கட்சிகளிலும் பிரதிநிதித்துவம் வேண்டும் என்பது சாதியின்பால் ஏற்பட்டது அல்ல சமூகநீதியின்பால் ஏற்பட்டது என்பதை விடுதலை சிறுத்தைகள் உணர்கிறது என இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

அகில இந்திய அளவில் தலைவராக உயர்ந்தவர் காமராஜர். எத்தனை ஆட்சி மாறினாலும் எத்தனை கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள் உருவானாலும் கல்வி என்றால் காமராஜர் பெயரை உச்சரித்து விட்டு தான் அதைப்பற்றி பேச முடியும். முதலமைச்சர் பதவியில் இருக்கும் போதே அந்தப் பதவியை ராஜினாமா செய்தவர் காமராஜர். காமராஜர் வகித்த பதவி கவுன்சிலர் பதவியோ, ஒன்றிய கவுன்சிலர் பதவி, ஒன்றிய பெருந்தலைவர் பதவியோ, எம்பி பதவியோ அல்ல முதல்வர் பதவி முதல்வராக இருப்பவர்கள் தாங்கள் தொடர்ந்து அப்ப பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக பீகார் மாநிலத்தில் முதல்வராக இருக்கும் நிதீஷ் குமார் இந்தியா கூட்டணியை விட்டு வெளியேறவும் இதிலிருந்து விலகி இன்று பாஜகவை தேடிச்செல்லும் நிலைக்கு வந்துள்ளார்.
இதேபோல் மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே உத்தவ்தாக்கரேக்கு எதிராக கட்சியை இரண்டாகப் பிளந்து பாஜக ஆதரவோடு முதல்வராகி விட்டார். இப்படி பல்வேறு அரசியல் நிகழ்வுகள் அரசியல் துரோகங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் எந்த நெருக்கடியும் இல்லாத நேரத்திலும் கட்சியை வலுப்படுத்த வேண்டும் மக்களை சந்திக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தவர் காமராஜர். அவரை பின்பற்றி தான் லால் பகதூர் சாஸ்திரி,மொரார்ஜி தேசாய் போன்றவர்கள் அரசியல் பணியாற்றினார்கள். காமராஜர் தலைவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக திகழ்ந்தவர் முன்னோடி என்றால் முன்நின்று நடத்த வேண்டும் மற்றவர்களை முன்னாடி அனுப்பி பின்னால் இருந்து இயக்குபவர் அல்ல. போரடுவதிலும் மக்கள் பணி செய்வதிலும் முன்னோடியாக இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர் காமராஜர் எனக் கூறிய திருமாவளவன் நாடார் சமுதாயத்தினர் வணிகத்திலும், கல்வி நிறுவனங்களிலும் மிகப்பெரிய வளர்ச்சி பெற்று உள்ளது. என்பது யாராலும் மறுக்க முடியாது அப்படிப்பட்ட நீங்கள் அரசியலிலும் எல்லா அரசியல் கட்சிகளிலும் பங்கேற்று மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துவதாக” கூறினார்.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.