மாநாடு நடைபெறும் வரை ஆட்டோக்கள் மூலம் விளம்பரம் செய்வதற்கு தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக இந்த பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் தவெக மாநாடு
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள சூழ்நிலையில் அதனை எதிர்கொள்ளும் வகையில் தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது. விக்கிரவாண்டியில் முதலாவது மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய த.வெ.க. தலைவர் விஜய், இரண்டாவது மாநில மாநாடு வருகிற 21-ந் தேதி மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே பாரபத்தி பகுதியில் நடைபெறுகிறது. ஏற்கனவே 25-ம் தேதி மதுரை மாநாடு நடைபெறும் என சொல்லிருந்த சூழலில் விநாயகர் சதுர்த்தி காரணமாக தேதி மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆட்டோக்கள் மூலம் மாநாட்டு விளம்பரம்
இந்நிலையில் முன்னேற்பாடு பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்து காவல்துறை தரப்பில் 42 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. அதற்கு தற்போது அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பதிலளித்துள்ளார். இந்த நிலையில் மாநாடு குறித்து விளம்பரம் செய்வதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் மூலம் ஸ்டிக்கர்கள் மற்றும் தமிழக வெற்றி கழக கொடி கட்டப்பட்டு தயார் செய்யப்பட்டிருந்தது. இதனை தமிழக வெற்றி கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாநாடு நடைபெறும் வரை ஆட்டோக்கள் மூலம் விளம்பரம் செய்வதற்கு தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக இந்த பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநாடு ஏற்பாடு தீவிரம்
ஒருபக்கம் பிரம்மாண்டமாக மாநாடு மேடை, விஜய் நடந்து செல்லும் rampwalk way மேடை, தடுப்பு வேலிகள், ஒலி ஒளி கருவிகள் பொருத்துவதற்கான கேலரிகள் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அதேபோல மாநாடு வரும் தொண்டர்களின் வசதிக்கேற்ப குடிநீர் தொட்டிகள் பொருத்தும் பணிகளும் , சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களும், மருத்துவ பாதுகாப்பு அறைகள், கழிப்பறைகள், ஏற்படுத்தும் பணிகளும் ஒரு புறம் துவங்கியுள்ளது. மாநாடு பகுதிக்கு எதிரே உள்ள 200 ஏக்கர் நிலமும் தேர்வு செய்யப்பட்டு மாநாடு வரும் தொண்டர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் இடம் தயார் செய்யும் பணியும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.