மதுரை நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை மாநகர் அண்ணா நகர் காவல் நிலையத்தில் டி.டி.எஃப் வாசன் 3 ஆவது நாளாக கையெழுத்திட்டார். நாளை செல்போன் மற்றும் ஆவணங்களுடன் நேரில் விசாரணைக்கு ஆஜராக கோரி அண்ணாநகர் காவல்துறை சார்பில் டி.டி.எஃப் வாசனுக்கு சம்மன்.

 

மூன்றாவது நாளாக கையெழுத்திட்ட டி.டி.எஃப் வாசன்

 

டி.டி.எஃப் வாசன்  கடந்த மாதம் 15 -ம் தேதி அன்று மதுரை முதல் திருச்செந்தூர் செல்லும் வழியில், வண்டியூர் டோல்கேட் அருகே காரில் செல்போன் பேசியபடி, அஜாக்கிரதையாக காரை ஒட்டியதாக அண்ணா நகர் காவல் துறையினர் டி.டி.எஃப் வாசன் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட 6 -வது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ”10 நாட்கள் தினசரி காலை 10 மணிக்கு அண்ணாநகர் காவல் நிலையத்தில் டி.டி.எஃப் வாசன் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்” - என்ற நிபந்தனையுடன் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. அதன்படி 3வது நாளான இன்று மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர்களுடன் வந்த டி.டி.எஃப் வாசன் கையெழுத்திட்டார். 

 


 

டி.டி.எஃப் வாசனுக்கு சம்மன் ஒப்படைக்கப்பட்டது

 

இந்நிலையில் 3 -வது நாளாக டி.டி.எஃப் வாசன் அண்ணாநகர் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில் நாளை தன்னிடம் உள்ள ஆவணங்கள் மற்றும் செல்போனுடன் காவல்நிலையத்தில் ஆஜராக கோரி டி.டி.எஃப் வாசனுக்கு அண்ணாநகர் காவல்நிலைய சார்பில் சம்மன் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அண்ணா நகர் காவல் நிலையத்தில் வெளியே நின்ற ரசிகர்களை சந்தித்து காவல் நிலையத்தின் அருகில் சாலை சாலை ஓரத்தில் நின்று கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.