கோயிலுக்குள் பட்டியல் இன மக்களை அனுமதி மறுத்து சட்ட ஒழுங்கு பிரச்சனையில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யலாம் - நீதிபதி

Continues below advertisement

அறந்தாங்கி அருகே மங்கலநாடு வடக்கு கிராமத்தில் மங்கல நாயகி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பட்டியல் இன மக்களை அனுமதிக்க கோரிய வழக்கு.

கடந்த 2021ல் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் அனைத்து சமுதாயத்தினர் கலந்து கொண்ட சமாதான கூட்டம் நடைபெற்றுள்ளது. அங்கு எடுக்கப்பட்ட முடிவை கண்டிப்பாக அனைவரும் கடைபிடிக்க வேண்டும். மேலும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், கோயிலுக்குள் அனைத்து தரப்பினரும் சுவாமி தரிசனம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம் மங்கலநாடு வடக்கு கிராமத்தைச் சேர்ந்த எம்.மதிமுருகன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு. அதில், "எங்களது கிராமத்தில் அருள்மிகு மங்கல நாயகி அம்மன் கோயில் உள்ளது. நான் பட்டியல் இன வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் இக்கோயிலுக்குள் உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்ய எனக்கு அனுமதி மறுக்கின்றனர். 

Continues below advertisement

அதேபோல் இக்கோயில் திருவிழா உட்பட அனைத்து நிகழ்ச்சிகளிலும் நான் மட்டுமன்றி பட்டியல் இன மக்களைக் கோயிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்ய தடை விதித்துள்ளனர்.  எனவே, பட்டியல் இன மக்கள் அக்கோயிலுக்குள் சென்று வழிபடவும், திருவிழாவில் பங்கேற்கவும் அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி பி.டி. ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு தினம் கொண்டாடப்பட்டு வரும் இந்த வேளையில், பட்டியல் இன மக்களை கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுப்பது தலைகுனிய வேண்டிய விஷயம்.

- அனைத்து சாதியினரும் கோயிலுக்குள் செல்லவும், சுவாமி தரிசனம் செய்யவும் உரிமை உண்டு

- இந்த வழக்கில் மனுதாரர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதால், அவரையும், அவர் சார்ந்த சமுதாயத்தினரையும் கோயிலுக்குள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி மறுத்துள்ளனர். 

பிறப்பால் ஒருவர் தங்களை உயர்ந்தவராகவும், மற்றவரை தாழ்ந்தவராகவும் நினைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது போன்ற தீண்டாமை செயலை, இந்த நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. 

கடந்த 2021ல் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் அனைத்து சமுதாயத்தினர் கலந்து கொண்ட சமாதான கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் எடுக்கப்பட்ட முடிவை கண்டிப்பாக அனைவரும் கடைபிடிக்க வேண்டும். மேலும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், கோயிலுக்குள் அனைத்து தரப்பினரும் சுவாமி தரிசனம் செய்வதை உறுதி செய்ய வேண்டும். அதில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அறந்தாங்கி கோட்ட வட்டாட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கலாம். 

மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏதேனும் நிகழ்ந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் காவல்துறையினர் வழக்கு பதிந்து கைது செய்யலாம் என உத்தரவிட்டார்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.