திருப்பரங்குன்றம் தர்கா மற்றும் கோவில்களில் கால்நடைகளை பலியிடும் வழக்கம் உள்ளது. ஒற்றுமையே பலம் என்பதால் தமிழக அரசு அனைத்து மதத்தினருக்கும் இடையே ஒற்றுமையை பேண விரும்புகிறது- மதுரை மாநகர காவல் துறை ஆணையர் தரப்பில் பதில் மனு தாக்கல்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக மனு
மதுரையைச் சேர்ந்த கண்ணன் முத்துகுமார் உள்ளிடோர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "திருப்பரங்குன்றம் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இது பாண்டிய மன்னன் காலத்தில் கட்டப்பட்டது. திருப்பரங்குன்றம் கோவிலின் தென் பகுதியில் உமையாண்டார் குகை கோவிலும், 11 தீர்த்தக் குளங்களும் அமைந்துள்ளன. இந்த கோவிலில் எவ்விதமான உயிர் பலியிடுதலும் செய்தல் கூடாது. திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் சிக்கந்தர் பாதுஷா தர்கா அமைந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் சிக்கந்தர் பாதுஷா தர்காவின் சார்பில் ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டு, சமபந்தி உணவு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இது சுப்பிரமணிய சுவாமி கோயிலின் பக்தர்களின் மனதை புண்படுத்தும் விதமாக அமைந்தது. திருப்பரங்குன்றம் மலையில் உயிரினங்களை பலியிடுவதற்கும், சமைத்து பரிமாறுவதற்கும் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்றும் திருப்பரங்குன்றம் மலையை ஒன்றிய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்றும் திருப்பரங்குன்றம் மலை, சிக்கந்தர் மலை என அழைப்பதற்கு தடைவிதிக்க கோரியும் திருப்பரங்குன்ற மழையை சமணர் குன்று மலை என அறிவிக்கக்கூடிய மனுவும், இதேபோல சிக்கந்தர் மலையில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் சிக்கந்தர் பாதுஷா தர்கா புதுப்பிக்கும் பணிக்கு காவல்துறை தொந்தரவு செய்யக்கூடாது என பல் வேறு மனுக்கல் தாக்கல் செய்யபட்டு வழக்கு விசாரனை நிலுவையில் இருந்தது.
பதில் மனு தாக்கல்
இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது அதில், " திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள அருள்மிகு 18-ம் படி கருப்பசாமி திருக்கோவில், அருள்மிகு பாண்டி முனீஸ்வரர் திருக்கோவில் மற்றும் பிற கோவில்களில் கால்நடைகளை பலியிடும் வழக்கம் உள்ளது.
வெளிநபர்கள் யாரும் தலையிட்டு குழப்பம் ஏற்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம்
ஒற்றுமையே பலம் என்பதால் தமிழக அரசு அனைத்து மதத்தினருக்கும் இடையே ஒற்றுமையை பேண விரும்புகிறது. அதன் அடிப்படையில் ஜனவரி 30 ஆம் தேதி இரு சமயத்தைச் சேர்ந்தவர்களுக்கிடையே கூட்டம் நடத்தப்பட்டது. அதில், "தர்காவிற்கு வருபவர்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் பட்சத்தில் ஆடு, கோழிகளை பலியிட்டு சமைத்து அனைவருக்கும் பரிமாறி சாப்பிடுவர். திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த இரு சமூகத்தினருக்கும் ஏற்கனவே உள்ள வழிபாட்டு நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்றவும், தங்களுடைய இந்த நடைமுறையில் வெளிநபர்கள் யாரும் தலையிட்டு குழப்பம் ஏற்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம்" எனவும் ஒரு மனதாக முடிவு செய்து தெரிவித்தர். அதோடு இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பிற சமயத்தை சேர்ந்தவர்களும் இதுபோல வேண்டுதல் வைத்து ஆடு, கோழிகளை பலியிட்டு சமைத்து பரிமாறுவது வழக்கமாக உள்ளது" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொல்லியல்துறை அனுமதி?
தொல்லியல்துறை தரப்பில், " வழக்கு தொடர்பாக பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. அதைத்தொடர்ந்து அரசுத்தரப்பில், "திருப்பரங்குன்றம் மலை பகுதியில் எழுந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுவிட்டது" என தெரிவிக்கப்பட்டது. அதனை தொல்லியல்துறை தரப்பில் ஏற்க மறுத்த நிலையில், "திருப்பரங்குன்றம் மலை தொல்லியல்துறைக்கு சொந்தமானது என்பதால், அங்கு எதைச் செய்தாலும் தொல்லியல்துறையிடம் அனுமதி பெற வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது.
அதோடு மனுதாரர்கள் தரப்பில், "இது தொடர்பாக கீழமை நீதிமன்றம் வழங்கிய உத்தரவை பிரைவசி கவுன்சில் உறுதி செய்துள்ளது" என தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், "கடவுள்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள். சில மனிதர்கள் சரியாக இல்லை" என கருத்து தெரிவித்தனர். தொல்லியல் துறை மலை தங்களுக்கு சொந்தமானது என்று கூறுவதற்கு ஏற்றுக்கொள்ள முடியாது மலை அனைவருக்கும் சொந்தமானது என தெரிவித்த நீதிபதிகள்
தொடர்ந்து, "தொல்லியல்துறை தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யவும், திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக உள்ள உத்தரவுகளைத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.