விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கே.கே.நகர் காலனி அமீர்பாளையம் பகுதியை சேர்ந்த அஜித்குமார்(25)- கார்த்திகா(23) தம்பதியினர் 2018ஆம் ஆண்டு திருமணமாகிய நிலையில் அதே பகுதியில் வசித்துவந்துள்ளனர்.  இந்நிலையில் அஜித்தின் மனைவி கார்த்திகாவிற்கு கடந்த (2021)ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதியன்று சாத்தூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.  அப்போது குழந்தைக்கு நாக்கு சரிவர வளராமல் இருந்த நிலையில் சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் அதே நாளில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.  இதனையடுத்து 3நாட்களுக்கு பின்னர் குழந்தைக்கு நாக்கில் அறுவை சிகிச்சை செய்து பின்னர் ஒரு ஆண்டு கழித்த பின் இரண்டாவது அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.



 

இதனையடுத்து ஓராண்டு ஆன நிலையில் கடந்த வாரம் குழந்தை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துவந்து பல்வேறு பரிசோதனைகளை செய்த பின்னர் நேற்று காலை நாக்கில் அறுவை சிகிச்சை செய்வதற்காக குழந்தையை மருத்துவர்கள் அழைத்துசென்றுவிட்டு திரும்ப கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து நாக்கிற்கு பதிலாக குழந்தையின் பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் மருத்துவர்களிடம் கூறிய போது அவசர அவசரமாக குழந்தையை மீண்டும் அறுவைசிகிச்சைக அறைக்கு அழைத்து சென்று மீண்டும் நாக்கில் அறுவைசிகிச்சை செய்ததாக சொல்லப்படுகிறது.

 

இதனையடுத்து மருத்துவர்களிடம் ஏன் பிறப்புறுப்பில் ஆப்ரேசன் செய்தீர்கள் என கேட்டபோது அவசர சிகிச்சை என்பதால் கேட்காமல் ஆப்ரேசன் செய்துவிட்டோம் என கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தையின் தந்தை அஜித் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை குறித்து காவல்நிலையத்தில் விசாரணை நடத்தகோரி புகார் அளித்துள்ளார்.



 

இது குறித்து குழந்தையின் தந்தை விளக்கம் கேட்டபோது மருத்துவமனை முதல்வரும் குழந்தையின் உடல்நலன் கருதி அவசரத்திற்காக கேட்காமல் அறுவைசிகிச்சை செய்துவிட்டதாக விளக்கமளித்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக சைல்டு லைன் அதிகாரிகளுக்கும் புகார் அளிக்கப்பட்ட நிலையில் தற்போது அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

 

இது குறித்து பேசிய குழந்தையின் தந்தை அஜித் : எனது குழந்தைக்கு நாக்கில் பிரச்சினை இருந்ததால் வறுமையின் காரணமாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தோம். கடந்த 3 நாட்களாக பல்வேறு பரிசோதனைகள் நடத்தபட்ட போதும் கூட நாக்கில் மட்டுமே பிரச்சினை உள்ளதால் அறுவைசிகிச்சை என கூறிய நிலையில் திடிரென எதற்கு பிறப்புறுப்பில் அறுவைசிகிச்சை செய்தார்கள் என்பதே தெரியவில்லை. எனது குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு மருத்துவமனை நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் எனவும், அரசு மருத்துவமனையை நம்பி வந்தால் இது போல அலட்சியமாக செயல்பட்டால் நாங்கள் யாரை தான் நம்புவது என வேதனையோடு கேள்வி எழுப்புகிறார்.



 

இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கையில்..,”அந்த குழந்தை பிறந்து நான்கு நாட்களில் வாயில் கட்டி இருப்பது தெரிய வந்ததால் மதுரை அரசு மருத்துவமனையில் தான் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து குழந்தைக்கு ஓராண்டாகியுள்ள நிலையில் வாயில் மற்றொரு அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அறுவை சிகிச்சை அரங்கில் குழந்தையை பரிசோதித்த போது குழந்தையின் பிறப்புறுப்பில் பிரச்னை இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பிறப்புறுப்பில் ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் மற்றொரு அறுவை சிகிச்சையில் மும்முரமாக இருந்ததால் குழந்தையுடன் தந்தையிடம் இது தொடர்பாக தெரிவிக்கவில்லை. இதனால் தந்தை ஆத்திரம் அடைந்து புகார் அளித்துள்ளார். தவறான சிகிச்சை எதுவும் நடைபெறவில்லை குழந்தைக்கு நல்லது தான் செய்யப்பட்டுள்ளது. தற்போது குழந்தை எந்த பிரச்னைகளும் இன்றி நலமாக உள்ளது என்றார்.

 




ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்