மதுரையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் "இம்மானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் காவல்துறை மெத்தனமாக நடந்து கொண்டுள்ளது. மதுரையிலிருந்து பரமக்குடி சென்றபோது பல்வேறு இடங்களில் காவல்துறை தடுத்து நிறுத்தியது, 4 மணிநேரத்திற்கு மேலாக பயணம் செய்ய வேண்டிய சூழல் உருவானது. பரமக்குடிக்கு செல்ல விடாமல் காவல்துறை வாகனங்கள் குறுக்கே நிறுத்தப்பட்டது. எனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தில் மற்றொரு அமைப்புக்கு அஞ்சலி செலுத்த காவல்துறை அனுமதித்தது.



ஒரே சமூகத்திற்கு உள்ளாக மோதலை உருவாக்க காவல்துறை நினைக்கிறது, இம்மானுவேல் சேகரன் நினைவிட பொறுப்பை மாற்ற வேண்டும், இம்மானுவேல் சேகரனுக்கு தொடர்பில்லாதவர்கள் நினைவிட பொறுப்பு நடத்தி வருகிறார்கள். புதிய தமிழகம் கட்சியிடம் நினைவிட பொறுப்பை வழங்க வேண்டும். இம்மானுவேல் சேகரன் நினைவு அஞ்சலி செலுத்தக்கூடாது என இருட்டடிப்பு செய்ய இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம், காவல்துறை திட்டமிட்டு செய்து வருகிறது. தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டது. ஒரு வாக்குறுதியையும் தி.மு.க., செயல்படுத்தவில்லை. அனைத்து தேர்தல் வாக்குறுதிக்கும் நேர்மாறாக திமுகவின் நடவடிக்கைகள் உள்ளன.

 


 

மின் கட்டண உயர்வை ஏற்றுக் கொள்ள முடியாது, மின் கட்டண உயர்வால் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும், தமிழக அரசு மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும், மின்சார வாரியத்தில் உள்ள ஊழலை சரி செய்தாலே மின் கட்டணத்தை உயர்த்த தேவையில்லை, செப்டம்பர் 20 ல் மின் கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டம், நீட் தேர்வு தோல்வியின் சரிவுக்கு தி.மு.கவே பொறுப்பு, திமுகவின் தவறான பிரச்சாரத்தால் நீட்டை மாணவர்கள் எதிர்கொள்ள முடியவில்லை. இன்றைய சூழலில் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாத சூழல் உள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கப்படுவதில்லை.

 

அரசியலுக்காக நீட் விவகாரத்தில் தி.மு.க., தவறாக செயல்பட்டு வருகிறது. நீட் தேர்வை ரத்து செய்வோம் என தி.மு.க., பொய் பிரச்சாரம் செய்கிறது, முதல்வர் சர்வாதிகார போக்குடன் பேசி வருகிறார், மக்களின் குரல்களை முதல்வர் செவி சாய்த்து கேட்பதில்லை" என கூறினார்


 






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர