மதுரை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட  கோசாகுளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வெள்ள நிவாரண மையத்தினை ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ்சேகர் கூறுகையில், “மதுரை மாவட்டத்தில் மாவட்ட அளவிலான பேரிடர் வெள்ளப்பெருக்கு தொடர்பான ஒத்திகை 5 இடங்களில் நடைபெற்றது. மழை பேரிடரை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மாவட்டத்தில் 190 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளது. கோசாகுளத்தில் மாதிரி நிவாரண முகாம் அமைக்கப்பட்டுள்ளது.



ஒவ்வொரு மையத்திலும் தலா 200 பேரை தங்கவைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எப்போது பேரிடம் வந்தாலும் அதனை எதிர்கொள்வது குறித்து முன்னேற்பாட்டு பணிகள் தீவிரம், தாலுகா அளவில் வட்டாச்சியர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. முகாம்களுக்கு மக்களை அழைத்துவருவது, மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதற்கு என தனித்தனியே குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் இன்றளவில் 50% நீர்நீலைகள் முழுமையாக எட்டியுள்ளது, 25 %, 75 % எட்டியுள்ளதால் பருவமழை காலங்களில் நீர்நிலைகளை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைத்துள்ளோம்.



 

வைகை அணையில் இருந்து 7ஆயிரம் கனஅடி நீர் தற்போது வெளியேற்றப்படுகிறது. வைகை ஆற்றில் 60 ஆயிரம் கனஅடி வரை நீர் கடந்த காலங்களில் சென்றுள்ளது. 1 லட்சம் கனஅடி வரை நீர் செல்லும் வகையில் வைகை ஆற்றுப்பகுதி பலமாக உள்ளது. நீரானது 60 ஆயிரம் கனஅடி தாண்டும் போது முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவுள்ளோம். வைகையாற்று கரையோரங்களில் தாழ்வான பகுதிகளாக 27 இடங்களை கண்டறிந்து அங்குள்ள மக்களை மாற்று இடங்களுக்கு சென்று தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மழைக்கால நோய்க்கான முன்னெச்சரிக்கையாக போதிய மருந்து , மாத்திரைகள் தயார் நிலையில் உள்ளன.

 


 

இதுபோன்று பேரிடர்காலங்களில் கால்நடைகளை பாதுகாக்கவும் சிறப்பு குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மழைக்காலம் தொடங்கியுள்ளதால் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளோம். இதுவரை டெங்கு கொசு உற்பத்தி அதிகமாக இருக்கும் இடங்களை கண்டறிந்து கொசு மருந்து தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை பணிகள் நடைபெறும் பகுதிகளில் உள்ள சேதமடைந்த சாலைகளை தற்காலிகமாக சீரமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளது, வைகையாற்று கரையோரங்களில் பொதுமக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும். மதுரை மாவட்டம் வெள்ள அபாய எச்சரிக்கையில் உள்ளது. ஆனால் தற்போது அச்சமடையும் வகையில் எந்த நிலையும் இல்லை.1077 என்ற டோல் ப்ரீ எண் மூலம் மக்கள் பேரிடர் உதவிக்காக தொடர்பு கொள்ளலாம்” என்றார்.