தேனியில் அரசு நிலம் மோசடி வழக்கில் முன்னாள் கிராம நிர்வாக அதிகாரி சுரேஷ், ரமேஷ், முத்து, பாலு, மற்றொரு சுரேஷ் ஆகிய 5 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.


தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு நிலங்கள் தனியார் சிலரால் அபகரிக்கப்பட்டன. வடவீரநாயக்கன்பட்டியில் 109 ஏக்கர், தாமரைக்குளத்தில் 60 ஏக்கர், கெங்குவார்பட்டியில் 13 ஏக்கர் என மொத்தம் 182 ஏக்கர் அரசு நிலம் அரசு அதிகாரிகள் துணையுடன் அபகரிக்கப்பட்டு, பல்வேறு நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டதாக அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்தது.


தேனி : 182 ஏக்கர் அரசு நிலங்கள் முறைகேடு: வட்டாட்சியர் கிருஷ்ணகுமாரை கைது செய்த சிபிசிஐடி போலீசார்!



இதற்கு உடந்தையாக இருந்த 2 தாசில்தார்கள் உள்பட 7 பேர் கடந்த 2021-ம் ஆண்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் பெரியகுளம் கோட்டாட்சியராக இருந்த ரிஷப் கொடுத்த புகாரின் பேரில், பெரியகுளத்தில் ஆர்.டி.ஓ.க்களாக பணியாற்றிய ஜெயப்பிரிதா, ஆனந்தி, தாசில்தார்கள் ரத்தினமாலா, கிருஷ்ணகுமார், மண்டல துணை தாசில்தார்கள் மோகன்ராம், சஞ்சீவ் காந்தி, நில அளவையர்கள் பிச்சைமணி, சக்திவேல், வடவீரநாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ், நில அளவையரின் உதவியாளர் அழகர், மண்டல துணை தாசில்தாரின் உதவியாளர் ராஜேஷ்கண்ணன், நிலத்தை அபகரித்த பெரியகுளம் முன்னாள் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அன்னப்பிரகாஷ், முத்துவேல்பாண்டியன், போஸ் ஆகிய 14 பேர் மீது தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் மேலும் பலரின் பெயர்கள் இந்த வழக்குகளில் சேர்க்கப்பட்டன.



இந்த வழக்கில் தாசில்தார் கிருஷ்ணகுமார், அன்னபிரகாஷ் உள்பட 8 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். மேலும் சிலரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் தேடப்பட்ட வடவீரநாயக்கன்பட்டி முன்னாள் கிராம நிர்வாக அதிகாரி சுரேஷ் (39) என்பவரை போலீசார் நேற்று முன்தினம் பிடித்து விசாரணை நடத்தினர். அவருடன் வடபுதுப்பட்டி பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரமேஷ் (52), ஜே.ஜே. காலனியை சேர்ந்த முத்து (58), அம்மாபுரம் சாலையை சேர்ந்த பாலு (41), மற்றொரு சுரேஷ் (40) ஆகியோரையும் போலீசார் பிடித்து தேனி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். 




காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான போலீசார், பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் அரசு நிலத்தை அபகரிக்க கிராம நிர்வாக அதிகாரி உடந்தையாக இருந்ததாகவும், மற்றவர்கள் அரசு நிலத்தை அபகரித்ததாகவும் தெரியவந்தது. விசாரணையை தொடர்ந்து இந்த வழக்கில் முன்னாள் கிராம நிர்வாக அதிகாரி சுரேஷ், ரமேஷ், முத்து, பாலு, மற்றொரு சுரேஷ் ஆகிய 5 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களை தேனி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.




மேலும் செய்திகளை காண,ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண