முல்லைப் பெரியாறு அணை என்பது ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு நீராதாரமாக விளங்கக்கூடிய அணையாகும். இந்த முல்லைப் பெரியாறு அணைக்குறித்து ஒவ்வொரு மழை பெய்யும் காலங்களில் கேரளாவில் விஷம பிரச்சாரங்கள் நடத்தப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது.




முல்லைப் பெரியாறு அணை பலகீனமாக உள்ளது என்றும், இதனால் கேரள மக்களுக்கு ஆபத்து உடனடியாக அணையை இடித்து விட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்று பல்வேறு பொய் பிரச்சாரங்களில் கேரளாவில் உள்ள அமைப்புகள், தனிநபர்கள் சமூக வலைதளங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


ஆனால் முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது முல்லைப் பெரியாறு அணைக்கு எந்த ஆபத்தும் இல்லை என அவ்வப்போது உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் மத்திய அரசு சார்பில் கண்காணிப்பு குழு, துணை கண்காணிப்பு குழு உள்ளிட்டவை ஆய்வு செய்து அறிக்கைகள் சமர்ப்பித்து வருகிறது.




இந்நிலையில் கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து முல்லை பெரியாறு அணைத்து நீர்வரத்து அதிகரித்தவுடன் அங்குள்ள கேரளா மக்களை பயமுறுத்தும் விதமாக சில அமைப்புகள் முல்லைப் பெரியாறு அணை இடிய போகிறது என்று விஷம பிரச்சாரங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். தற்போது வயநாட்டில் ஏற்பட்ட பேரழிவிற்கும் முல்லைப் பெரியாறு அணைக்கும் முடிச்சு போட்டு பல்வேறு விஷம பிரச்சாரங்களை கேரளா சமூக வலைதளங்களில் சிலர் வெளியிட்டு வருகின்றனர். மேலும் அமைச்சரவையிலும் முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்ட வேண்டும் என வாதங்கள் முன்வைத்து பேசப்பட்டு வருகிறது. இதனை தமிழக விவசாய சங்கங்கள் முற்றிலுமாக கண்டித்து வருகின்றனர்.




இதன் ஒரு பகுதியாக இன்று தேனி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியான குமுளியை முற்றுகை இட போவதாக விவசாய சங்கத்தினர் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். இதற்காக சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பெரியார் வைகை பாசன விவசாய சங்கத்தைச் சார்ந்த விவசாயிகள் தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தைச் சார்ந்தவர்கள் உள்ளிட்டோர் முற்றுகையிட வந்தனர் அவர்களை லோயர் கேம்ப் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுக் அவர்களது மணிமண்டபம் முன்பாக காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினார். மேலே சென்றால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் எனக் கூறியதால் விவசாய சங்கத்தினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினார். இதனை அடுத்து சாலையோரமாக நின்று விவசாய சங்கத்தைச் சார்ந்தவர்கள் தங்களது கண்டன கோஷங்களை பதிவு செய்தனர்.




உடனடியாக முல்லைப் பெரியாறு அணை குறித்த விஷம  பிரச்சாரங்களை கேரளாவில் உள்ள அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.  முல்லைப் பெரியாறு அணை என்றும் பலமாக உள்ளது என்று அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இந்த நிகழ்விற்காக தமிழக காவல்துறையினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் இதுகுறித்து விவசாய சங்கத்தினர் கூறுகையில், உடனடியாக கேரளாவில் இது போன்ற முல்லைப் பெரியாறு அணை குறித்து விஷம பிரச்சாரங்கள் மேற்கொள்ளுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கேரள அரசு மேற்கொள்ள வேண்டும். இது போன்ற விஷயத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு இதற்குரிய தீர்வு காண வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.