தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட பெண் உயிரிழந்த நிலையில், பெண்ணின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே  உள்ள நடுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரது மனைவி ஜெயப்பிரியா. 24 வயதான இவர் கடந்த 23 ஆம் தேதி இரவு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு சேர்க்கப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் செய்யப்பட்டு ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்ட நிலையில், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் ரத்தப்போக்கு ஏற்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில்  நேற்று  அந்த பெண் உயிரிழந்தார்.




பெரியகுளம் அரசு மருத்துவமனையில் இருந்த செவிலியர்கள் மருத்துவர்கள் தாமதமாகவும், அலட்சியமாகவும் மருத்துவம் பார்த்து அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் ரத்தப்போக்கு ஏற்பட்டதால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பெண்ணுக்கு கர்ப்பபையை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  அகற்றியதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.


பெண்ணின் உயிரிழப்பிற்கு காரணமான மருத்துவர்கள் செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் பிறந்த ஆண் குழந்தையுடன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முன்பாக குமுளி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின் அனைவரும் கலைந்து சென்றனர்.


இந்த நிலையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் குடும்பத்தினர் புகார் கூறியதையடுத்து பெரியகுளம் கோட்டாட்சியர் முத்துமாதவன் தற்போது தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டு வருகின்ற நிலையில் இறந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.