தமிழகம் முழுவதும் 86 ஆயிரம் பட்டாக்களை வழங்க போவதாக தமிழக முதல்வர் அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவித்திருந்த நிலையில், பல்வேறு பகுதிகளில் இலவச வீட்டு மனைப்பட்டாக்கள் கிடைத்து வருகின்றன. இந்த நிலையில், தேனி மாவட்டத்தில் உள்ள போடி, சின்னமனுாரில் 6800 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் பணியை சர்வே பிரிவினர் தொடங்கியுள்ளனர்.
சென்னை, செனாய் நகர் விங்ஸ் கன்வென்ஷென் சென்டரில் நடைபெற்ற அரசு விழாவில் 2,500 பயனாளிகளுக்கு வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்பேசுகயில், தமிழ்நாடு முழுக்க நகர பகுதிகளில் 86 ஆயிரம் பட்டாக்களை 6 மாத காலத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை, நெல்லை போன்ற மாநகராட்சிகள், நகராட்சிகள், மாவட்டத் தலைநகரப் பகுதிகளில் மட்டும் 57 ஆயிரத்து 84 பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட இருக்கிறது. ஏறத்தாழ 63 ஆண்டு கால பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்துகின்ற வகையில், 86 ஆயிரம் பட்டாக்களை வழங்க நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவித்திருக்கிறார்கள். இது தமிழ்நாட்டின் வரலாற்றில் நிலைத்து இருக்கப் போகின்ற ஒரு நடவடிக்கை என்று கூறியிருந்தார்.
இது தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் தந்துவருகிறது இதனிடையே, தேனி மாவட்டத்தில் போடி, சின்னமனுாரில் விவசாய நில பட்டாக்களில் வீடு கட்டி வசித்த 6800 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் பணியை மாவட்ட நிர்வாகம் ஆரம்பித்துள்ளது. இதற்காக பட்டாக்களை கணினி மயமாக்கும் பணிகளும் ஆரம்பமாகியிருக்கிறது. போடி, சின்னமனுாரில் உள்ள பலரும் தங்கள் நிலங்கள் தொடர்புடைய பட்டாக்கள் கணினியில் இல்லாததால் நிலங்கள் வீட்டுமனைகளை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வந்தனர். சிலர் அரசு வழங்கிய பட்டாக்களை வைத்திருந்தாலும், அவை ஆன்லைனில் தவறுதலாக காண்பித்ததாக கூறினார்கள்.
இதையும் படிங்க : Manjummel Boys Making Video: மஞ்சும்மல் பாய்ஸ் ஓராண்டு...பிரமிக்க வைக்கும் குணா குகை மேக்கிங் வீடியோ வெளியீடு...
அதனால்தான் போடி, சின்னமனுார் பகுதியை சேர்ந்தவர்கள் ஆட்சியர் அலுவலகம், தாலுகா, ஆர்டிஓ, அலுவலகங்களில் பட்டாவை கணினியில் பதிவேற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இது சம்பந்தமான மனுக்களையும் பயனாளிகள் தந்திருந்த நிலையில், அவைகள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது சிலரது மனுவை ஆய்வு செய்த போது பலர் ரய்த்துவாரி எனப்படும் விவசாய நிலத்திற்கான பட்டாக்களை வைத்திருந்தது தெரிந்தது. இதனால் சர்வே துறை சார்பில் அவ்வாறு வீட்டு மனைகளுக்கு விவசாய நிலம் என வழங்கப்பட்ட பட்டாக்கள் எத்தனை என சர்வே பணிகளை துவக்கியது. அத்துடன், சில அரசு பதிவேடுகளில் அந்த நிலங்களில் வீடுகள், வீட்டு மனைகள் இருப்பதாக பதிவு செய்யப்பட்டதும் கண்டறியப்பட்டது.
அந்தவகையில், சின்னமனுாரில் 1878, போடியில் 4985 பட்டாக்கள் வீட்டுமனை பட்டாக்களாக மாற்றும் பணி துவங்கியது. இதற்காக சர்வேயர்கள் மூலம் அளவீடு, ஆவணங்கள் சரிபார்ப்பு செய்யப்பட்டது. இறுதியில், பட்டா உதவியாளர், சர்வேயர், துணைதாசில்தார், முதுநிலை படம் வரைபவர், துணை ஆய்வாளர், தாசில்தார், ஆர்டிஓ, டிஆர்ஓ, கலெக்டர் என 9 அதிகாரிகள் ஒப்புதலுடன் பட்டா மாற்றம் செய்து கணினியில் பதிவேற்றும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இதுவரை போடியை சேர்ந்த 783 பெயருடைய பட்டாக்கள் வீட்டு மனைபட்டாக்களாக மாற்றம் செய்து கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும, விரைவில் மற்ற பட்டாக்களும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.