தேனி மாவட்டம்  பூதிப்புரம் கிராமம் பகுதி காமாட்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னபாலு. அவருடைய மகன் சரவணன் (27). இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.  கடந்த ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் தேதி இவருடைய செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய பெண், தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், குறைந்த வட்டியில் கடன் பெற்றுத் தருவதாகவும் கூறினார்.



அதை நம்பிய சரவணன் கடன் பெற ஒப்புக்கொண்டு, தனது ஆவணங்கள் மற்றும் விவரங்களை வாட்ஸ்-அப் மூலம் அனுப்பி வைத்தார். அப்போது அந்த பெண், 2 லட்சத்து 70 ஆயிரம் கடன் பெறுவதற்காக செயலாக்க கட்டணம் 3,750 செலுத்த வேண்டும் என்று கூறினார். அந்த தொகையையும் அவர் செலுத்தினார். பின்னர் வங்கி அதிகாரி, ரிசர்வ் வங்கி அதிகாரி என்ற அறிமுகத்தோடு சரவணனின் செல்போன் எண்ணுக்கு சிலர் பேசினர். அவர்கள், பரிமாற்றக் கட்டணம், சேவை கட்டணம், 3 மாதத்துக்கான கடன் தவணைத்தொகை மற்றும் அதிகாரியிடம் ஆவணங்களில் கையெழுத்து பெற லஞ்சம் கொடுப்பதற்கான தொகை என பல காரணங்களை கூறி பணம் கேட்டனர். அதை எல்லாம் நம்பிய சரவணன், ஏற்கனவே செலுத்திய செயலாக்க கட்டணத்துடன் சேர்த்து மொத்தம் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 671 அனுப்பி வைத்தார்.




விரைவில் கடன் கிடைக்கும் என்று நம்பிய சரவணனை, மீண்டும் அந்த நபர்கள் தொடர்பு கொண்டனர்.  அவருடைய வங்கிக் கணக்கில் கடன் தொகையை அனுப்ப முடியவில்லை என்றும், புதிதாக வங்கிக் கணக்கு தொடங்கி அதில் பணம் அனுப்ப வேண்டும் என்றும் கூறினர். மேலும், ஒரு  லட்சம் செலுத்தி புதிய வங்கிக் கணக்கு தொடங்கினால், மீண்டும் அந்த தொகையை கடனுடன் சேர்த்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர். அதை நம்பிய அவர் புதிய கணக்கு தொடங்கவும் ரூ.1 லட்சம் அனுப்பினார். அதன்பிறகு காப்பீட்டு தொகை, தடையில்லா சான்று பெறுவது, வேலைபார்த்தவர்களுக்கு கமிஷன் தொகை என மீண்டும் பல காரணங்களை கூறி பணம் கேட்டுள்ளனர். அதையும் நம்பிய சரவணன், மேலும் ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை பல தவணைகளில் செலுத்தினார்.  அந்த வகையில் மொத்தம் ரூ.3 லட்சத்து 99 ஆயிரத்து 671 செலுத்திய நிலையில், அவருக்கான கடன் தொகை கிடைக்கவில்லை.




கடனை பெற்றுக் கொடுக்காமலும், கட்டிய பணத்தை திரும்ப கொடுக்காமலும் இழுத்தடித்த நிலையில் மீண்டும் சில காரணங்களை கூறி பணம் கேட்டனர். இதனால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சரவணன் இதுகுறித்து தேனி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.  அதன்பேரில் எஸ்.ஐ தாமரைக்கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மோசடி செய்த நபர்கள் பயன்படுத்திய செல்போன் எண், வங்கிக் கணக்கு போன்ற விவரங்களை வைத்து அவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


ABP Nadu Exclusive: மீனாட்சி அம்மன் திருக்கல்யாண டிக்கெட் வினியோகத்தில் முறைகேடு? ஆன்லைன் மோசடி அம்பலம்!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண