'கீழடி'- என்ற ஒற்றைச் சொல் தமிழர்களின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. ஐந்தாம் கட்ட தொல்லியல் அகழாய்வின் துவக்கத்தின் முதலே கீழடி பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. உலகத் தமிழர்களால் கீழடி கொண்டாடப்படும் ஒன்றாக உள்ளதால்  தமிழ்நாடு அரசு இதற்கு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.



 

மதுரை அருகே சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட திருப்புவனம் அடுத்த கீழடியில் கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து முதல் மூன்று  கட்ட அகழாய்வுப் பணி இந்திய தொல்லியல் துறை சார்பாக நடைபெற்றது.  நான்கு, ஐந்து, ஆறு, 7-ஆம் கட்ட அகழாய்வுகள் தமிழ்நாடு தொல்லியல் துறையால் நடத்தப்பட்டு வருகிறது. நடந்து முடிந்த 6-ம் கட்ட அகழாய்வில் கீழடி மட்டுமல்லாமல் கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட நான்கு இடங்களில் அகழாய்வு பணி நடைபெற்றது. கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி துவங்கிய 7-ம் கட்ட அகழாய்விலும் அதே நான்கு ஊர்களிலும் அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. கீழடி 6-ம் கட்ட அகழாய்வில் மக்கள் வாழ்விடப் பகுதியாக கருதப்படும் அகரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில்  ஐந்து அடுக்களுக்கு மேல் கொண்ட உறை கிணறு கிடைக்கப்பெற்றது.



இந்நிலையில் 7-ம் கட்ட அகழாய்வில் நடைபெற்று வரும் நிலையில் கீழடியில் சுடுமண்ணால் ஆன தொட்டி ஒன்று தென்பட்டுள்ளதாக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ட்வீட் செய்துள்ளார்.

 

 






இது குறித்து கீழடி தொல்லியல் ஆய்வாளர்கள் நம்மிடம்”, தற்போது கிடைத்திருக்கும் சுடுமண் தொட்டி வடிவிலான அமைப்பு உறை கிணறாகவோ அல்லது தண்ணீர் தொட்டியாகவோ இருக்கலாம். ஆனால் இதனை கூடுதலாக ஆய்வு செய்யும்போது தான் விபரங்கள் தெரியவரும்.

 


 

கீழடி தொடர்பான கூடுதல் படங்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் - கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வுப் பணி மீண்டும் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது !

 

இந்த உறை கிணறு அல்லது தண்ணீர் தொட்டி சுமார் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கலாம். கீழடி 6-ம் கட்ட அகழாய்வில்  அகரத்தில் உறை கிணறு கிடைத்தது போல், தற்போது தண்ணீர் தொட்டி போன்ற அமைப்பு கீழடியில் கிடைத்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது" என்றனர்.