அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்களையும் தடை செய்ய கோரிய  வழக்கில், பிளாஸ்டிக் தடையை கண்காணிப்பதற்காக தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது என நீதிமன்றத்தில்  அரசு தரப்பு அறிக்கை தாக்கல் செய்ததை தொடர்ந்து, பிளாஸ்டிக் தடை குறித்த வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

 

அனைத்து வகை பிளாஸ்டிக் பயன் பட்டினை  தடை செய்ய கோரி பலர் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தனர். அதில்,சுற்றுச்சூழல்  மற்றும் வனத்துறை செயலர் 2018ல் பிறப்பித்த அரசாணை எண் 84ந் படி பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த விதமான பிளாஸ்டிக்குகளை பயன்படுத்தலாம், எவற்றை பயன்படுத்தக் கூடாது என்ற வரைமுறைகள் தெளிவாக இல்லை.  குறிப்பாக  பால் பாக்கெட்டுகளாக பயன்படுத்த பிளாஸ்டிக்குகளை அனுமதிக்கும் நிலையில் தண்ணீர் பாக்கெட்டுகளுக்கு அனுமதி இல்லை. பிளாஸ்டிக் என்பது ஒரே மாதிரியான பொருளே. மிகக்குறைவான தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தலாமா? என்பது குறித்தும், அவை தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கான அனுமதி குறித்தும் எவ்வித தகவலும் அரசாணையில் இல்லை.  இதனால் தமிழக மக்கள் எந்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தலாம்? எவற்றை பயன்படுத்தக் கூடாது என்பதில் குழப்பம் அடைந்துள்ளனர். எனவே பிளாஸ்டிக் தடை நடைமுறைப்படுத்துவது குறித்து குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பிளாஸ்டிக் பயன்பாட்டை  முழுமையாக தடை செய்வது குறித்து உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தனர்.

 

இந்த வழக்கு மகாதேவன் மற்றும் சத்ய நாராயண பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாஸ்கரன் ஆஜராகி  தமிழ்நாடு அரசு பிளாஸ்டிக் தடை குறித்து கண்காணிப்பதற்காக மற்றும் முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு

2022 பிப்ரவரி மாதம் அரசு அறிவிப்பானை வெளியிட்டு தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த குழுவில் அனைத்து துறை செயலாளர் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் செயலர் உட்பட 19 பேர் உறுப்பினராக உள்ளனர். இந்த கமிட்டி இரண்டு மாதத்திற்கு ஒரு தடவை கூடி விவாதித்து வருகிறது.

 

மேலும், பிளாஸ்டிக் தடை நடைமுறைப்படுத்துவதற்காகவும் மாவட்ட அளவிலும் மாநகராட்சி அளவிலும் ஊராட்சி ஒன்றியம் என பல்வேறு நிலைகளில் கமிட்டிகள் அமைக்கப்பட்டு இந்த கமிட்டியின் மூலம் பிளாஸ்டிக் தடை நடைமுறைப்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுத்து வருகிறது என கூறினார். இதனை பதிவு செய்த நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தனர்.



மற்றொரு வழக்கு




எம்.பி.சி வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டின் அடிப்படையில் (TRB - PG Assistant) ஆசிரியர் தகுதி தேர்வு பி.ஜி அசிஸ்டன்ட் தேர்வு செய்யப்பட்டவர்களுக்காக வெளியிடப்பட்ட பட்டியலை ரத்து செய்ய கோரிய வழக்கில், தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான (BC, MBC/DNC) செயலர், ஆசிரியர் தகுதி தேர்வு வாரிய சேர்மன் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

கரூர் மாவட்டத்தை சேர்ந்த குப்புசாமி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

அதில், "நான் MBC வகுப்பைச் சார்ந்தவன். நான் கணித பிரிவில் பி.எஸ்.சி, பி.எட், எம்.எஸ்.சி, எம்.எட் படிப்பு முடித்துள்ளேன். 2021 ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பி.ஜி.அசிஸ்டன்ட் (TRB - PG Assistant) அறிவிப்பு வெளியானது. இதில் எம்.பி.சி (MBC) வகுப்பு 3 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.  (MBC, MBC (V), MBC/DNC). ஆசிரியர் தகுதி தேர்வு (TRB) எழுதி 150 மதிப்பெண்ணுக்கு 87.17 மதிப்பெண் பெற்றேன்.

 

ஆசிரியர் தகுதி தேர்வு பி.ஜி. அசிஸ்டன்ட் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் 28.08.2022 வெளியிடப்பட்டுள்ளது. இதில், எம்.பி.சி வன்னியர் (MBC (V)) வகுப்பினை சார்ந்த நபர் 150 மதிப்பெண்களுக்கு 75.1 மதிப்பெண் பெற்று தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் சரி பார்ப்பு பட்டியலில் பெயர் உள்ளது. இது சட்ட விரோதமானது. எம்.பி.சி வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டினை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

 

எனவே, எம்.பி.சி வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் ஆசிரியர் தகுதி தேர்வில் பி.ஜி.அசிஸ்டன்ட் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பட்டியலுக்கு தடை விதிக்க வேண்டும், குழு உருவாக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பட்டியல் ஆய்வு செய்து புதிய பட்டியல் வெளியிட வேண்டும். மேலும், எம்பிசி வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு கீழ் ஆசிரியர் தகுதி தேர்வு பிஜி அசிஸ்டன்ட் தேர்வு செய்யப்பட்டு வெளியிடப்பட்ட பட்டியலை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இந்த வழக்கில் ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் நடவடிக்கைகளை தொடரலாம் ஆனால் இறுதி முடிவு நீதிமன்ற தீர்ப்பிற்கு உட்பட்டது. மேலும், தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான (BC, MBC/DNC) செயலர், ஆசிரியர் தகுதி தேர்வு வாரிய சேர்மன் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை செப்டம்பர் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.