இந்த அரசு  இரண்டு ஆண்டுகளிலே சாதனையை காட்டிலும் சறுக்கியதுதான் அதிகம், இரண்டு ஆண்டுகளிலே முன்னேற்றத்தை காட்டிலும், பின்னேற்றம்தான் அதற்கு அடையாளமாக இருக்கிறது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.


இதுதொடர்பாக மதுரையில் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது..,” வைகை நதிக்கரையில் கள்ளழகர் ஆற்றிலே இறங்கி மக்களுக்கு அருளாசி வழங்கிய நிகழ்வு மதுரையிலே சீரும் சிறப்போடும் நடைபெற்றது. இந்த நிகழ்விலே பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தாண்டி துரதிஷ்டவசமாக மூன்று பேர் நீரிலே மூழ்கி உயிரிழந்த வருந்தத்தக்க நிகழ்வு நடைபெற்றிருக்கிறது. ஒருவர் மூச்சு திணறி இருந்ததாக செய்திகள் தெரியப்படுகிறது .ஆகவே இவர்களின்  குடும்ப நலனை கருத்தில் கொண்டு முதலமைச்சர்  இதற்கு உரிய இழப்பீடு நிவாரணத்தை வழங்க வேண்டும். வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் பொழுது, இரு கரைகளிலும் தண்ணீர் திறப்பதற்கு முதன் முதலில் அரசாணை எடப்பாடியார் வெளியிட்டார். எடப்பாடியாரின் வழிகாட்டுதலோடு சட்டசபையிலே இந்த அரசின் கவனத்திற்கு சித்திரை திருவிழா பாதுகாப்போடு செய்யப்பட வேண்டிய, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து அங்கே அரசின் கவனத்திற்கு எடுத்து வைக்கப்பட்டது. ஆனாலும் அரசின் பாதுகாப்பு நடவடிக்கை குறைவாகத்தான் இருந்தது.




இந்த இரண்டு ஆண்டுகளில் திமுக அரசு சாதனை அரசாக இன்றைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பறைசாற்றி கொள்கிறார். ஆனால் இதிலே நாம் ஆராய்ந்து பார்த்தால் நடுநிலையாளர்கள் கருத்து , அரசியல் ஆய்வாளர்கள்  கருத்து, மக்கள் சொல்லுகிற கருத்து மற்றும் மக்களுடைய எண்ணங்கள் என்னவென்று சொன்னால், இந்த இரண்டு ஆண்டுகளிலே திமுக அரசு சாதித்ததை காட்டிலும், சறுக்கியது தான் அதிகம் என்பது தான் இன்றைய எதார்த்தமான நிலையாக இருக்கிறது. முன்னுக்குப் பின் முரணாக முடிவெடுத்து, குளறுபடிகள் மொத்த அடையாளமாக இருக்கிறது அதேபோன்று திமுக ஆட்சியிலே அமருவதற்கு உறுதுணையாக இருந்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல், நிலுவையிலே வைத்திருப்பதை மக்கள் இன்றைக்கு, அந்த வாக்குறுதிகளை எப்போது நிறைவேற்றுவீர்கள் என்கிற எதிர்பார்ப்பில் இருக்கும்போது பூஜ்ஜியமாகத்தான் இன்றைக்கு அரசினுடைய செயல்பாடுகள் இருக்கிறது.




இன்னும் ஒரு படி மேலே திமுக அரசு இரண்டு ஆண்டுகள் வரலாற்றிலே,   அரசினுடைய அந்த இமேஜ் என்று விளம்பரத்தினால்   கட்டமைக்கப்பட்டிருக்கிற அந்த இமேஜ்,  பொங்கல் பரிசு தொகுப்பில் அவர்கள் வழங்கிய பொருள்களின் தரத்தின் மூலமாக அந்த இமேஜ் தகர்க்கப்பட்டது. இன்றைக்கு இப்போது 12 மணி நேர வேலை மசோதா அதை அறிவிப்பதும், ஒட்டுமொத்தமாக கூட்டணி கட்சிகளை அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அந்த தொழிற்சங்கமே எதிர்ப்பு தெரிவித்த பிறகு, அதை வாபஸ் வாங்குவது ஆகவே இதை தான் இரண்டு ஆண்டுகளிலே திராவிட முன்னேற்றக் கழகம்  பின்வாங்கியது தான் அதிகம். பின்வாங்கியதிலேயே அவர்களுக்கு ஏற்பட்ட தோல்விகள் தான் அதிகம். சாதனை என்பது எதுவும் சொல்லிக் கொள்வதற்கு எதுவும் இல்லை என்பதுதான் இன்றைய கால நிலவரம் ஆக இருக்கிறது.





 இன்றைக்கு 12 மணி நேர வேலையிலே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சென்னையில் பொதுக் கூட்டத்திலே சொல்லுகிறார், இந்த அரசை வழிநடத்துவது முதலாளிகளா? அதிகாரிகளா? அல்லது ஆட்சியாளர்களா? இந்த சந்தேகத்தை கூட்டணி கட்சித் தலைவர்களே எழுப்பி இருக்கிறார்கள் என்று சொன்னால், இந்த அரசினுடைய செயல்பாடு எப்படி கேள்விக்குறியாய் இருக்கிறது. தீக்கதிர் நாளிதலும், முரசொலி நாளிதலும் ஒரு வார்த்தை யுத்தங்களை, எழுத்து யுத்தங்களை விமர்சனகளை இன்றைக்கு நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இரண்டு ஆண்டுகளிலே  இன்றைக்கு கஞ்சா வேட்டை என்று காவல்துறை பல்வேறு முயற்சிகளை எடுக்கிறார்கள் ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை, எங்கும் கஞ்சாநிறைந்து இருக்கிறது. இன்றைக்கு மதுபான விற்பனை என்பது  கல்யாண மண்டபங்களில் சரி ,விளையாட்டு திடல்களில் அங்கே சிறப்பு கட்டணத்தை செலுத்தி மதுபானங்களை பெற்றுக் கொள்ளலாம் என்று விதிக்கப்படுகிற அரசாணையை, எதிர்ப்பு வந்தவுடன் அதை மறுபடியும் பின்வாங்குகிறது. 





12 மணி நேர வேலை மசோதா தாக்கல் செய்வது பின்வாங்குவது, நீட் தேர்வு ரத்து என்று சொன்னதை கிடப்பில் போட்டது, மாணவர்களுக்கு கல்வி கடன் ரத்து என்று சொன்னதை கிடைப்பிலும் போட்டது ,ஆயிரம் ரூபாய் இன்னும் நாலு மாதங்கள் கழித்து வழங்குவோம் என்று சொல்லுவது, அரசு ஊழியர்களுக்கு பதிய ஓய்வூதி திட்டத்தை நாங்கள் செயல்படுத்துவோம் என்று சொன்னது, இவையெல்லாம் இன்றைக்கு இந்த அரசின் மீது எந்த எதிர்பார்ப்புகள் எதுவும் நிறைவேறாது ஒட்டுமொத்தமாக மக்கள் கடுமையான அதிர்ச்சியில் இருக்கிறார். இன்றைய திராவிட முன்னேற்றக் கழக அரசு வெற்றியை பெற்றது 30 சதவீதம் என்றால், தோல்வி பெற்றது 70 சதவீதமாக உள்ளது. ஆகவே இந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு தோல்வி அரசாக இருக்கிறது. மக்களின் மனங்களிலே வெல்வதற்காக அவர்கள் எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வியில் தான் பிடித்திருக்கிறது. இந்த அரசிலே இந்த செயல்படாத தன்மையை ஒருபுறத்தில் இருக்கிறது என்று சொன்னால், அம்மா அரசின் திட்டங்களை முடக்கி வைப்பது, மறுபுறத்திலே ஆட்சியாளர்கள் மக்களை அவமதிப்பது,  கேலி பேசுவது, கிண்டல் செய்வது ,நக்கல் அடிப்பது, நையாண்டி செய்வது என்பதும் மக்கள் முகம் சுளிக்கிற வகையில் இருப்பதும், அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடியாக ஏற்பட்டதோடு, ஒரு அமைச்சருடைய வெளியிடப்பட்டிருக்கிற அந்த ஆடியோ விவகாரம் இந்திய அளவில் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது அந்த ஆடியோ தன்மையை வெளியிட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார். அன்றைக்கு நீராடியாவுடைய ஆடியோ விவகாரம் ஆதாரமாக இருந்து மிகப்பெரிய அளவிலே அது விவாதிக்கப்பட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அன்றைக்கு ஏற்பட்டிருக்கிற அந்த ஊழல் அடையாளம் இன்றைக்கு மீண்டும் அந்த வரலாறு திரும்பி ,30 ஆயிரம் கோடியிலே நிதி அமைச்சர் உடைய ஆடியோ விவகாரம் இன்றைக்கு அந்த ஊழல் வரலாற்றிலே வரலாறு திரும்பி இருக்கிறது என்பதுதான் கள நிலவரம் ஆக இருக்கிறது. அதனுடைய உண்மைத்தன்மை அறிய வேண்டும் என்று உலகத்திற்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள்,  எதிர்க்கட்சித் தலைவர் தினம்தோறும் தினந்தோறும் இந்த மக்கள் நலனுக்காக இந்த அரசின் கவனத்திலே கொடுக்கிற கோரிக்கைகளையாவது இந்த அரசு செயல்படுத்தி மக்கள் நலன் காக்க முன்வருமா? என்பதை இந்த நேரத்திலே உங்கள் வாயிலாக கேட்டு, இந்த அரசு  இரண்டு ஆண்டுகளிலே சாதனையை காட்டிலும் சறுக்கியதுதான் அதிகம், இரண்டு ஆண்டுகளிலே முன்னேற்றத்தை காட்டிலும், பின்னேற்றம்தான் அதற்கு அடையாளமாக இருக்கிறது”. என்றார்.











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண