Just In





தற்காலிக ஆசிரியர் நியமனம் வழக்கு: தமிழக அரசின் அறிவிப்பை ரத்து செய்யக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு
வழக்கு விசாரணை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

இட ஒதுக்கீடு, முன்னுரிமை போன்றவை குறித்து முறையான வழிகாட்டுதல்கள் இன்றி தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்யக்கோரிய வழக்கின் விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்த பர்வதம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "நான் கணிதத்துறையில் பட்டமும், கல்வியியல் துறையில் பட்டமும் பெற்றுள்ளேன். 2013 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். தேர்வு முறை தொடர்பாக பல்வேறு வழக்குகள் தாக்கலான நிலையில், தமிழக அரசு கடந்த 2018 ஜூலை 20-ஆம் தேதி போட்டித் தேர்வுகளின் அடிப்படையில் ஆசிரியர் தேர்வு நடைபெறும் என அது தொடர்பான அரசாணை ஒன்றை வெளியிட்டது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று வெயிட்டேஜ் முறையால் 0.25 மதிப்பெண்களில் எனக்கான பணிவாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்புவதற்காக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
அதற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்ததன் அடிப்படையில், தற்காலிக ஆசிரியர் தேர்வுக்கு பல வழிகாட்டுதல்களை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. ஆனால் அதில் இட ஒதுக்கீடு, முன்னுரிமை தொடர்பாக முறையான வழிகாட்டுதல்கள் எதுவும் இல்லை. இதனால் கடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு வரை சென்ற பலர் பணியமர்த்த படவில்லை. அதுபோன்று முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். ஆகவே இட ஒதுக்கீடு, முன்னுரிமை போன்றவை குறித்து முறையான வழிகாட்டுதல்கள் இன்றி தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்தும், அதன் அடிப்படையில் நடவடிக்கைகளை தொடர இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சந்திரசேகர் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் இதே வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்விலும், நிலுவையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்