ராமநாதபுரத்தை சேர்ந்த மெஹ்ருன் நிஷா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "எனது கணவர் ரிபாயுதீன் கடந்த 2013 ஆம் ஆண்டு போதைப் பொருள் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டு 2016 ஆம் ஆண்டு முதல் இலங்கை சிறையில் உள்ளார். இலங்கை சிறையில் இருந்து இந்திய சிறைக்கு மாற்றுவது குறித்து இந்திய தூதரகத்திடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, எனது மனுவை பரிசீலனை செய்து, இலங்கை சிறையில் உள்ள எனது கணவரை இந்திய சிறைக்கு  மாற்ற உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என  மனு தாக்கல் செய்திருந்தார் .இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மத்திய அரசுத்தரப்பில், மனுதாரரின் கணவரை ஜனவரி மாதம்  இலங்கை சிறையில் இருந்து இந்திய சிறைக்கு மாற்றுவதாக இலங்கை தூதரகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் வழக்கின் நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.



 

மணல் கடத்துவதற்காக அமைக்கப்பட்ட மண் சாலை - அகற்றுவது தொடர்பாக தூத்துக்குடி ஆட்சியர் பதில்தர உத்தரவு 

 

தூத்துக்குடி மாவட்டம் குலசேகர நத்ததைச் சேர்ந்த சரவணன்  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில்," தாமிரபரணி ஆற்றிலிருந்து சிலர் சட்ட விரோதமாக மணல் அள்ளி விற்பனை செய்து வருகின்றனர். இதற்காக மாவடி பண்ணை முதல் ஏரல் மேலமங்கலம் குறிச்சி வரை முறைகேடாக மணல் சாலை அமைத்து, பல ஆண்டுகளாக மணல் அள்ளி வருகின்றனர். இதனால் அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு இந்த பகுதியில் ஏராளமான சட்டவிரோத செயல்களும் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து நடவடிக்கை கோரி, பொதுப்பணித் துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனு வழங்கியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நிபுணர் குழு அமைத்து ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து புன்னக்காயல் வரை  எவ்வளவு மணல் திருடப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்ய இடைக்கால உத்தரவிட வேண்டும். மேலும், மாவடி பண்ணை முதல் ஏரல் மேலமங்கலம் குறிச்சி வரை அமைக்கப்பட்டுள்ள மணல் சாலையை அகற்றவும், முறைகேடாக பல கோடி மதிப்புள்ள மணலை அள்ளி விற்று  வருபவர்கள் மீதும், இவர்களுக்கு   இதுநாள்வரை உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு  வழக்கு குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.