கீழடி சிவகங்கை மாவட்டத்திற்கு பெருமைக்குறிய இடமாகவும், தமிழரின் தாய்மடியாகவும் போற்றப்படுகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சியில் உள்ள களப்பிரர் கால கல்வெட்டை பாதுகாக்கப்பட்ட சின்னமாக தொல்லியல் துறை அறிவித்ததற்கு சிவகங்கை தொல் நடை குழு  நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளது.



 

இதுகுறித்து சிவகங்கை தொல் நடைக்குழு நிறுவனர் கொல்லங்குடியைச் சேர்ந்த புலவர் கா.காளிராசா கூறியதாவது, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தில் உள்ள பூலாங்குறிச்சி மலைச்சரிவில் மூன்று கல்வெட்டுக்களை மேலப்பனையூரைச் சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர் கரு. இராஜேந்திரனால் 1979ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதுவரை களப்பிரர் காலம் இருண்ட காலம் என்றிருந்த நிலைப்பாட்டை இந்த கல்வெட்டு மாற்றியமைத்தது.  அதில் சேந்தன் கூற்றன் என்ற மன்னனின் பெயர் இடம்பெற்றுள்ளது. மன்னனின் ஆட்சி ஆண்டும் கல்வெட்டில் குறிப்பிடப்பெற்றுள்ளது மேலும் கோயிலுக்கு தானமாக நிலம் வழங்கியது தொடர்பான பிரம்ம தாயம், மங்கலம் போன்ற சொற்கள் இடம் பெற்றுள்ளன. கோயிலை குறிக்கும் கோட்டம் என்ற சொல்லும் இடம்பெற்றுள்ளது. இவ் வட்டெழுத்து கல்வெட்டு பொது ஆண்டு 5 என தொல்லியல் ஆய்வாளர்களால் கருதப்படுகிறது.



 

பெரும்பாலும் கல்வெட்டுகளில் புள்ளி வைத்து எழுதும் வழக்கம் இல்லை ஆனால் இங்கே மெய் எழுத்துக்கள் அனைத்தும் புள்ளி வைத்தே காணப்படுகின்றன. அது மேலும் இக்கல்வெட்டுக்கு சிறப்பு சேர்க்கிறது. இக்கல்வெட்டு அமைய பெற்ற பாறை இயற்கையாகவே உரியும் தன்மை கொண்டதாலும் வெயில் மழை போன்ற இயற்கை இடர்பாடுகளாலும் சிதைவுறும் நிலையில் இருந்ததைக் கண்டு தொல்லியலாளர்கள் அரசிடம் இதை பாதுகாக்க வலியுறுத்தி வந்தனர். கல்வெட்டு ஆய்வாளர் கரு. இராஜேந்திரன் புதுக்கோட்டை தொல்லியல் கழக நிறுவனர் ஆ.மணிகண்டன், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு ஆகியோர் தொல்லியல் துறை அமைச்சர்  தங்கம் தென்னரசுவிடம் இந்த வட்டெழுத்து கல்வெட்டு பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டி கோரிக்கை விடுத்திருந்தனர்.



 

அதை ஏற்று தமிழக அரசு தற்பொழுது தமிழ்நாடு அரசின் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சி கல்வெட்டுகளை அறிவித்திருப்பதில் சிவகங்கை தொல் நடைக் குழு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது மேலும் கீழடியில் அமைக்கப்பட்டு வரும் உலகத்தரம் வாய்ந்த அகழ் வைப்பகத்தில் முப்பத்தி நான்கு நிரந்தர பணியிடங்களை தோற்றுவித்ததற்கும் தொல்லியல் துறையில் புதிதாக தொல்லியல் முதுநிலை பட்டய வகுப்பு, 90க்கு மேற்பட்ட பாறை ஓவியங்களை ஆவணப்படுத்துதல், கல்வெட்டுகளை முப்பரிமான முறையில் ஆவணப்படுத்துதல், புதிதாக மூன்று இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள், சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சி மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி உள்ளிட்ட ஐந்து இடங்களில் உள்ள தமிழ் கல்வெட்டுகளை பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிப்பு செய்தது இவ்வாறாக தொல்லியலை பாதுகாக்க பல்வேறு முன்னெடுப்புகளை செய்துவரும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும் தமிழ்நாடு முதல்வருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றார்.