காவல் நிலைய விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் விவகாரத்தில் தொடர்புடைய நிகிதா என்ற பெண்மணி மீது கடந்த 2011 ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் திருமங்கலம் காவல் நிலையத்தில் பண மோசடி வழக்கு பதிவாகியுள்ளது, தெரிவந்துள்ளது.
 
உயிரிழந்த அஜித்குமார்

சிவகங்கை மடப்புரத்தைச் சேர்ந்த அஜித் குமார் என்பவர் மடபுரத்தில் உள்ள அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளி அம்மன் கோவிலில் ஒப்பந்த அடிப்படையில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்த கோயிலுக்கு கடந்த 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் நிகிதா மற்றும் அவரது தாயாரும் காரில் வந்துள்ளார்கள். நடக்கமுடியாததால் சக்கர வண்டி வேண்டும் என்று கேட்டதன் பெயரில் அஜித்குமார் உதவி செய்திருக்கிறார். அவரிடமே காரின் சாவியை கொடுத்து வேறு ஒரு இடத்தில் நிறுத்தும்படி கூறியிருக்கின்றனர். கார் ஓட்ட தெரியாத அஜித்குமார் வேறு ஒரு நண்பரின் உதவியுடன் காரை வேறு இடத்தில் நிறுத்தியிருக்கிறார். மதியம் 12 மணி போல் வழிபாடு முடிந்து திரும்பி வந்த அப்பெண்கள் கேட்டதும் மீண்டும் காரை எடுத்து அவர்களுக்கு கொடுத்து, அவர்களும் திரும்பி சென்று விட்டனர். மதியம் 2 மணி அளவில் திருப்புவனம் காவல் நிலையம் வந்த அப்பெண்கள் பர்சில் வைத்திருந்த பணம் ரூபாய் 2,500ம் பத்துப்பவுன் நகையும் காணவில்லை என்று வாய்மொழியாக புகார் கொடுத்திருக்கின்றனர். இது தொடர்பான போலீஸ் விசாரணையில் அஜித்குமார் உயிரிழந்தார். அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியது.

அஜித்தின் குடும்பத்திற்கு உதவி

இச்சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இறந்து போன அஜித்குமாரின் தாயாரிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேசி வருத்தம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அக்குடும்பத்திற்கு வீட்டுமனை பட்டா, ரூ.5 லட்சம் மற்றும் அஜித் குமாரின் சகோதரருக்கு ஆவின் நிறுவனத்தில் அரசு பணி என தமிழக அரசு சார்பாக அறிவிப்பு செய்யப்பட்டு நேரடியாக அமைச்சர் பெரிய கருப்பன் இதற்கான ஆணைகளை வழங்கி உள்ளார். 
 
நிகிதா மீது 2011-ல் பண மோசடி வழக்கு
 
இந்நிலையில் நகைகள் திருடு போனதாக புகார் அளித்த நிகிதா என்ற பெண்மணி மீது சமூக வலைதளங்களில் பலரும் குற்றம் சுமத்தி விமர்சனம் செய்து வரும் நிலையில், இவர் மீது கடந்த 2011 ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் திருமங்கலம் காவல் நிலையத்தில் ரூ.16 லட்சம் பண மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கில், திருமங்கலம் தாலுகாவைச் சேர்ந்த ராஜாங்கம் என்பவர், தன்னுடைய உறவினர்களுக்கு அரசு பணியில் ஆசிரியர் வேலை மற்றும் கிராம நிர்வாக அலுவலர் வேலை வாங்கி தருவதாகவும், அப்போதைய துணை முதல்வரின் தனி உதவியாளர் நன்கு பழக்கம் எனவும், அவர் மூலமாக வேலை வாங்கி தருவதாகவும் உத்தரவாதம் அளித்து, 16 லட்சம் ரூபாய் பெற்றதாக புகார் அளித்துள்ளார். இறுதியில் வேலை வாங்கித் தராமல் நிகிதா மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னையும் தனது உறவினரையும் ஏமாற்றிவிட்டதோடு பணத்தை திருப்பி தராமல் தலைமறைவாகிவிட்டதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.