சிவகங்கை மாவட்டம் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும், பிற்படுத்தப்பட்டோர் (B.C), மிகப்பிற்படுத்தப்பட்டோர் (MBC), சீர்மரபினர் (சீ.ம) பிரிவைச் சார்ந்த மாணாக்கர்கள், பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.
கல்வி உதவுத் தொகை - யாருக்கு?
அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பிரிவைச் சார்ந்த மாணவ, மாணவியருக்கு, பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை (PM YASASVI Postmatric Scholarship) திட்டமானது, நிபந்தனைகளின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நலத்துறை மூலம் வருடந்தோறும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் குறிப்பிட்ட மாணவ, மாணவியருக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இளங்கலை (தொழிற்படிப்பு) முதுகலை, பாலிடெக்னிக் போன்ற பிற படிப்பு பயிலும் மாணாக்கர்கள் இக்கல்வி உதவித்தொகை பெறுவதற்கு, குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2,50,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்
2025-26 ஆம் கல்வியாண்டில் மாணாக்கர்கள் மேற்படி கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கு, கல்லூரி மூலம் வழங்கப்பட்டுள்ள UMIS (University Management Information System) எண் மூலம், https://umis.tn.gov.in/ என்ற இணையதள முகவரியின் வாயிலாக வருகின்ற 31.12.2025 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், மாணாக்கர்கள் தாங்கள் பயிலும் கல்லூரியில் கல்வி உதவித்தொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை (Institution Nodal Officer) அணுகி, https://umis.tn.gov.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்டுள்ள கல்வி உதவித்தொகை திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை, அலுவலக நேரங்களில் அணுகி விவரங்கள் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தெரிவித்துள்ளார்.