கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி அன்று விஜய் பரப்புரை மேற்கொண்டார் அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்த விவகாரம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது. ஆனால் இதற்கு தமிழக வெற்றி கழகம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து, இந்த விசாரணை குழுவை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு மீதான விசாரணை திங்கள் அன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த தீர்ப்பானது தமிழக அரசியல் களத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Continues below advertisement

மறுபுறம் கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் சி டி ஆர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் ஜாமீனிலிருந்து வெளியே வர முடியாத அளவுக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மதியழகன் மற்றும் வெங்கடேசனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஆனந்த் மற்றும் நிர்மல் குமாரை கைது செய்ய ஐந்து அடிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.

Continues below advertisement

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பொதுப்பணித்துறை கட்டிடத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர் தவெக நிர்வாகிகள், பிரச்சார நிகழ்ச்சிக்கு சவுண்ட் சர்வீஸ் சேவை வழங்கிய ஆடியோ இன்ஜினியர், உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளர்கள் என பலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்று 8-வது நாளாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சிறப்பு புலனாய்வு குழுவினர் திருவள்ளூர், கடலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து கூடுதலாக ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என பல்வேறு மாவட்ட போலீசார் வரவழைக்கப்பட்டு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இப்படி விசாரணை தீவிரம் அடைந்து வரும் நிலையில், கரூர் துயர சம்பவத்தில் சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்பதாக திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.நிர்மல் குமாரை கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் சாணார்ப்பட்டி தமிழக வெற்றிக் கழக தெற்கு மாவட்ட செயலாளராக எஸ்.எம்.நிர்மல் குமார் உள்ளார். கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக சென்னை நீதிமன்றம் அளித்த உத்தரவை விமர்சித்து கருத்துகளை பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்தில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் எஸ்.எம் நிர்மல் குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.தொடர்ந்து அவரிடம் . அவரிடம் தலைமறைவாக உள்ள தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் இணைப்பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோர் எங்கே இருக்கிறார்கள் என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.