ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர், கமுதி, கடலாடி, கீழக்கரை, திருவாடனை, பரமக்குடி, ஆர்.எஸ்.மங்கலம், ராமநாதபுரம் உள்ளிட்ட தாலுகாக்கள் உள்ளது. இதில் மாவட்டம் முழுவதும் மானாவாரியாகவும் கண்மாய் நீர்ப்பாசனம் மூலம் 4 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெற்பயிர் பயிரிட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்தது. இதனால் விவசாயிகள் பயிரிட்டு இருந்த நெற்பயிர்களில் மழைநீரை போதிய அளவு விவசாயிகள் தேக்கி வைத்துள்ளனர்.




இந்த நிலையில் நெற்பயிர்களில் தேங்கியுள்ள மழைநீரில் யூரியா உரங்கள் போடப்பட்டால் தான் பயிர்கள் நன்றாக வளர்ந்து நல்ல மகசூல் அடையும் நிலைக்கு வந்தடையும். இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக கிராமப்புறங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளிலும், தனியார் உரகடைகளிலும் யூரியா, டிஏபி உரங்கள் கிடைக்காமல் விவசாயிகள் அலைந்து திரிந்து வருகின்றனர். இதையடுத்து ராமநாதபுரம்,  திரூத்திரகோசமங்கை முதுகுளத்தூர், உள்ள தனியார் உரக் கடைகளில் உரங்கள் வாங்குவதற்காக ஏராளமான விவசாயிகள் ஒரே நேரத்தில் குவிந்து உர வாங்குவதற்காக விவசாயிகள் முந்தி அடித்து வருவதால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



உரம் வாங்குவதற்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளால் அதிக அளவில் விவசாயிகள் உரம் வாங்க கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் மிகவும் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, காவல்துறையின் உதவியால் ஓரளவு கூட்ட நெருக்கடி சரிசெய்யப்பட்டது. இருந்தும் அதிக அளவில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஆதார் அட்டைக்கு குறிப்பிட்ட அளவே உரம் கிடைப்பதால் அவர்கள் விவசாயம் செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே கூட்டுறவு சங்கங்கள் உடனே உரங்களை தருவித்து விற்பனை செய்தால் மட்டுமே இந்த உரத் தட்டுப்பாடு நீங்க வாய்ப்பு உள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தகுந்த நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் துயரை நீக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


மேலும், ஒரு யூரியா உரம் அரசு சார்பில் 266 ரூபாய்க்கும், டிஏபி 1300 ரூபாய்க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தற்போது உரத் தட்டுப்பாடு ஏற்பட்டு ஒரே சமயத்தில் பெரும்பாலான விவசாயிகள் உரம் வாங்க குவிந்ததால் 266 ரூபாய்க்கு விற்க வேண்டிய யூரியா உரங்கள் 500 ரூபாய்க்கும், 1300 ரூபாய்க்கு விற்கப்பட வேண்டிய டிஏபி உரங்கள் 1700 ரூபாய்க்கும் அதிக விலைக்கு தனியார் உரக்கடைகள் விற்கப்பட்டு வருவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், கூடுதல் விலைக்கு உரங்களை விற்கும் தனியார் உரக் கடைகளுக்கு வேளாண்மைத் துறை அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாக, விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.



தற்போது கடன் வாங்கி அதிக விலை கொடுத்தாலும் உரம் தங்களுக்கு கிடைப்பதில்லை என்று வேதனை தெரிவிப்பதோடு, தங்களுடைய பயிர்களுக்கு உரத்தை போட முடியாமல் மிகுந்த மன வேதனை அடைந்து வருகின்றனர் விவசாயிகள். இதற்கு மாவட்ட நிர்வாகம், வேளாண் துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து, விவசாயிகளுக்கு அரசு நிர்ணயித்த விலையில் போதுமான உரங்கள் கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.