தென் மாவட்டத்தின் நுழைவாயிலான கப்பலூர் டோல்கேட்டை மக்களின் கோரிக்கையை ஏற்று அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.

 

மாவாட்ட ஆட்சியருக்கு முன்னாள் அமைச்சர் கடிதம்

 

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் மதுரை மாவட்ட ஆட்சியருக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது..,” தென் மாவட்டங்களின் நுழைவாயிலாக உள்ள கப்பலூர் டோல்கேட் விதிமுறையை மீறி அமைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் கேட்டு நிர்வாகம் தொடர்ந்து பிரச்னை செய்து வருவதாகவும், வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மற்றும் கப்பலூர் தொழில்பேட்டை நிர்வாகிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். போராட்டம் நடத்தும் போது மட்டும் நிர்வாகம் கட்டணம் வசூலிக்க மாட்டோம் என்று உறுதியளித்து, பின்பு டோல்கேட் கடந்து செல்லும் வாகனங்களை மொத்தமாக கணக்கிட்டு லட்சக்கணக்கில் பணம் செலுத்துமாறு நோட்டிஸ் அனுப்புவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

டோல்கேட்டை எடுக்க கோரிக்கை

 

தற்போது 4 வது முறையாக திருமங்கலம் பகுதி வாகனங்களுக்கு 2 லட்சம் முதல் 12 லட்சம் வரை கட்டணம் செலுத்தகோரி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது பொதுமக்களிடம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 2009 ஆண்டில் தி.மு.க, காங்கிரஸ் ஆட்சியில் இங்கு டோட்கேட் அமைக்கப்பட்டது. கடந்த பல ஆண்டுகளாக டோல்கேட்டை அகற்ற முயற்சி  மேற்கொள்ளப்பட்டது. 2021 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் இந்த டோல்கேட் அகற்றப்படும் என அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த திரு மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் இன்றுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்ற எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்காக ஒரு துரும்பை கூட கிள்ளிப் போடவில்லை. மத்திய அரசு 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு இடைப்பட்ட டோல்கேட்டை அகற்ற வாய்ப்பளித்தும் தி.மு.க அரசு அதை பயன்படுத்திக் கொள்ளவில்லை.

 

பொதுமக்கள் போராட்டம்

 

இது குறித்து ஏற்கனவே கடந்த  4.7.2022 அன்று கப்பலூர் டோல்கேட் அருகே எனது தலைமையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உண்ணாவிரதம் இருக்க முயற்சி செய்த போது, காவல்துறையிரால் நான் கைது செய்யப்பட்டு, எங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனையும் தங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். டோல்கேட் நிர்வாகம் உள்ளூர் சாலை அடைத்ததால் அப்பகுதி மக்கள் நேற்று பெரும் போராட்டத்தை நடத்தினார்கள். அரசின் சார்பில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் உள்ளூர் பொதுமக்கள் தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்தியுள்ளார்கள். ஆகவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் கப்பலூர் டோல்கேட்டை அகற்றுவதற்கு அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கையும், திருமங்கலம் தொகுதி மக்களின் கோரிக்கையும் கனிவுடன் பரிசிலினை செய்து, நிரந்தர தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.