மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.தி.மு.க., ஜெயலலிதா பேரவையின் சார்பில், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதுரையில் இருந்து அரிசி, சமையல் பொருட்கள், பெட்ஷீட், துண்டு, கைலி, சேலை, குடிநீர், ரொட்டி, பிஸ்கட் உள்ளிட்ட 35லட்ச ரூபாய் மதிப்பிலான  நிவாரண பொருட்களை சென்னை அதிமுக தலைமை கழகத்திற்கு சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி உதயகுமார் கொடியசைத்து அனுப்பி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்...,” மிக்ஜாம் புயல் தமிழகத்தில் கரையை கடக்க வில்லை, நெல்லூர் அருகே தான் கடந்தது ஆனால் புயலின் தாக்கத்தால் மக்கள் தண்ணீரில் தத்தளித்து கண்ணீர் வடித்து வருகிறார்கள். இந்த புயலில் மீட்பு பணியை இந்த அரசு சரியாக மேற்கொள்ள வில்லை. ஒரு மழைக்கே 3 லட்சம் குடியிருப்பில் வெள்ளம் சூழ்ந்துள்ளது வரலாறு காண வகையில் மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.




ஐந்து நாட்களாக மின்சாரம் வழங்கவில்லை குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சிறு கடைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைகள் அடைக்கப்பட்டது. காய்கறிகள், பால் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் வருமுன், வெள்ளம் நடக்கும்பொழுது, வெள்ளம் வந்த பின்பு என மூன்று நிலைகளை கடந்த காலங்களில் நாங்கள் ஆய்வு மேற்கொண்டோம் ஆனால் இன்றைக்கு மூன்று நிலைகளில் திமுக தோல்வி விட்டது. அடையாறு, கூவம், பள்ளிக்கரணை உள்ளிட்ட ஐந்து நீர் வழித்தடங்கள் தான் மழை நீரை கடத்த முடியும் ஆனால் அதற்குரிய இணைப்புகளை முறையாக செய்யவில்லை. முதலமைச்சர், தலைமைசெயலாளர், அமைச்சர்கள் சரியான எச்சரிக்கை மக்களுக்கு செய்யாமல் கவனக்குறைவாக இருந்தார்கள். கடந்த காலங்களில் இது போன்ற புயல் காலங்களில் நிமிடத்திற்கு நிமிடம் தகவல் வரும் அதை நாங்கள் மக்களிடத்தில் சொல்லுவோம் ஆனால் இந்த அரசு எத்தனை முறை கூறி உள்ளது.




ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் மழை பெய்தது அப்போது நடவடிக்கை எடுத்திருந்தால் தற்போது டிசம்பர் 3, 4 ல் பெய்த மழை பாதிப்பிலிருந்து மக்களை காப்பற்றிருக்க முடியும். ரூ.4,000 கோடி செலவு செய்யப்பட்டது என்று கூறினார்கள். அதை கடலில் கரைத்த பெருங்காயம் போல் கரைத்து விட்டார்களா? மக்களை காப்பதில் அரசு கோட்டை விட்டது. மக்களைப் பற்றி கவலைப்படாமல் சேலம் இளைஞர் அணி மாநாட்டில் உதயநிதிக்கு மகுடம் சூட்ட அனைத்து அமைச்சர்களும் சேலத்தில் இருந்தார்கள். புல்லட் ஓட்டி நகர் வலம் வருகிறார்கள். அதே போல் கார் ரேஸுக்கு நிதி ஒதுக்கீடு செய்தார்கள். வடகிழக்கு பருவமழையில் யாராவது கார் ரேஸ் வைப்பார்களா? அதேபோல் மாநாடு நடத்துவார்களா? எடப்பாடியார் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு களத்தில் வந்த பின்பு தான் எல்லா கட்சித் தலைவர்களும் வந்தனர். மீட்பு பணிகளுக்கு வாகனங்களுக்கு டீசல் கூட போட முடியாத அவல நிலை உள்ளது.  கார்கள் எல்லாம் ஒன்றோடு ஒன்று  மோதி உள்ளது.




 மழைநீர் வடிகால் பணியை 90% முடித்து விட்டோம் என்று கூறினார்கள் ஆனால் 10% கூட திமுக அரசு முடிக்கவில்லை. பால் விலை 200 ரூபாய் விற்கப்படுகிறது. படகில் ஒரு குடும்பத்தை மீட்க 5000 ரூபாய் என வசூல் செய்யப்பட்டுள்ளது தனியார்களை இப்படி அனுமதிக்கலாமா? அரசு கையாளத்தனதால் இது இப்படி நடக்கிறது. இது போன்ற கடந்த ஆட்சியில் நடந்தது உண்டா? சென்னையை சுற்றி 3000 ஏரிகள் உள்ளது இது போன்ற காலங்களில் அதிகமாக மழை பொழியும் பொழுது ஒவ்வொரு நீர் வெளியேறி சென்னைக்குள் நீர் புகுந்துவிடும் கடந்த எடப்பாடியார் ஆட்சியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் இது போன்ற ஏரிகளை சீரமைக்கப்பட்டதால் அந்த நீர்கள் எல்லாம் ஊருக்குள் வராமல் தடுக்கப்பட்டன. 




அமைச்சர் நேரு தற்போது நடைபெற்ற மழை வடிகால் பணியை நியாயப்படுத்தி பேசுகிறார் ஏற்கனவே அவர் 90% முடித்து முடித்ததாக பேட்டி அளித்துள்ளார். என்ன தேதி என்று கூட நான் வெளியிடுகிறேன். பாதிப்பிற்கு முன்பு ஒரு பேச்சு, பாதிக்கப்பட்ட பின்பு இன்னொரு பேச்சு என்று பேசுகிறார் இதன் மூலம் தோல்வியை ஒப்புக்கொள்கிறாரா? இன்றைக்கு ஜேசிபியில் ஒரு அமைச்சர் அமர்ந்து கொண்டு மக்களுக்கு வாழைப்பழம் பிரட் ஆகியவற்றை எப்படி வழங்கினார் என்று உங்களுக்கு தெரியும் மக்கள் உயிர் வேறு உங்கள் உயிர் வேறா? மக்கள் என்ன அகதிகளா? இன்றைக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரியிடம் ஆலோசனை கேட்பதில்லை. கடந்த காலத்தில் சிறப்பாக பணியாற்ற ககன்சிங் பேடி தற்போது எங்கே போனார்? அவருக்கு தான் சென்னையில் பற்றி வடிகால் பணி தெரியும். கடந்த சுனாமியின் போது சிறப்பாக அதிகாரிகள் பணியாற்றிய அதிகாரிகள் இப்போது இருக்கிறார்கள் அவர்கள் எங்கே போனார்கள் இன்றைக்கு திமுக அரசு முடங்கி போய் உள்ளது” எனக் கூறினார்.