நாங்கள் பிரச்சாரம் செய்யும் இடங்களில் உரிய அனுமதியின்றி சிவ பூஜையில் கரடி புகுந்தது போல புகுந்து  ஒரு கலவர மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என நினைக்கிறாரா டிடிவி தினகரன் என ஆர்.பி.உதயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.


ஆர்.பி.உதயகுமார் பேட்டி


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் பகுதிகளில் தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி - யை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையிலான அதிமுக நிர்வாகிகள் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்,”செல்லுகிற இடங்களில் எல்லாம் எங்களுக்கு மிக பெரிய வரவேற்பை பார்க்க முடிகிறது. தேர்தல் களம் ஆரம்பிக்கும் போது எடப்பாடி பழனிசாமியா, ஸ்டாலினா என இருந்தது, இன்று எடப்பாடி பழனிசாமி தேர்தல் களத்தில் முந்திச் செல்கிறார். ஏனென்றால் அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு உண்மையை பேசுகிறார். மு.க.ஸ்டாலின் 520 வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றாமல் அம்மாவின் திட்டங்களை ரத்து செய்துவிட்டு, போதை பொருட்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் தமிழ்நாடு தலைகுணிந்து நிற்கிறது, இந்த சீரழிவிற்கு யார் காரணம், மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் தான் காரணம் என்பதை மக்கள் தெளிவாக தெரிந்து கொண்டுள்ளனர்.


சிவ பூஜையில் கரடி


அனைத்திலும் பின்னடைவில் உள்ளது தமிழ்நாடு உள்ளது. மூன்று ஆண்டுகளில் மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ள காரணத்தால் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். மக்களின் கோபத்தை இந்த தேர்தலில் தீர்ப்பாக வெளியிடுவார்கள். தேனியில் அதிமுக பிரச்சார கூட்டத்தில் புகுந்த டிடிவி தினகரன், அவர் குக்கரை காட்டிய போது மக்கள் இரட்டை இலையை காட்டியுள்ளனர். நாங்கள் வருவதற்கு முன்பே சிவ பூஜையில் கரடி புகுந்தார் போல நாங்கள் எல்லா பகுதியிலும் தேர்தல் ஆணையத்திடம் முன்னாடியே அனுமதி பெற்று சட்டத்தை மதித்து பிரச்சாரம் செய்து வருகிறோம், நாங்கள் எங்கெல்லாம் பிரச்சாரம் செய்கிறோமோ அங்கெல்லாம் அனுமதியின்றி டிடிவி வருகிறார். சோழவந்தான் முதல் நேற்று ஆண்டிபட்டி வரை நாங்கள் அனுமதி பெற்ற பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் போது அவரும் வருகிறார். ஒரு கலவர சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என நினைக்கிறார். அரசியல் நாகரீகம் கருதி, ஒரு கட்சியினர் பிரச்சாரம் செய்யும் போது அந்த இடங்களை தவிர்ப்பது இயல்பு, ஆனால் இவர் செய்வது என்ன காரணத்திற்காக என அவரிடமே கேட்க வேண்டும். இது சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்குகிறாரா என நினைக்கிறோம். அவர் பிரச்சாரம் செய்கின்ற இடங்களில் நாங்கள் செல்வதில்லை, இருந்தாலும் பொறுத்திருந்து அவர்கள் சென்ற பின் பிரச்சாரம் செய்வோம் இது தான் அரசியல் மரபு.


நினைப்பது கானல் நீராகத்தான் போகும்


அவருக்கு தோல்வி பயம் வந்துவிட்டதால், அவருக்கு கட்டமைப்பு இல்லாததால் அவருக்கு மக்கள் வரவேற்பு இல்லாததால், அதிமுக தொண்டர்கள் வரவேற்பில் புகுந்து வரவேற்பை பெற்றுவிடலாம் என நினைப்பது கானல் நீராகத்தான் போகும். அவருக்கு தோல்வி உறுதி, இரட்டை இலை மலர்வது உறுதி. அமித்ஷாவிற்கு வேலைப்பளு இருக்கலாம். தேர்தல் நேரத்தில் இது போன்று நிகழ்வுகள் ரத்தாவது இயல்பு. அதன்படியே அமித்ஷா வருகை ரத்தாகி இருக்கலாம். இதுகுறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும். தேனியில் வரும் 9ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தேனி வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளார். அதற்கான பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம்” என்று தெரிவித்தார்.