ராமநாதபுரத்தைச் சேர்ந்த வீரபாகு உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,  நான் ராமநாதபுரம் நகர்ப்புற பா.ஜ.க. தலைவராக உள்ளேன். கடந்த 2018-ம் ஆண்டு வரை ராமநாதபுரத்தில் ஆட்டோ ஓட்டி வந்தேன். பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வந்தேன். கடந்த 29.3.2018 அன்று இரவு பயணி ஒருவரை ஆட்டோவில் ஏற்றிச்சென்றேன். அப்போது திடீரென 4 பேர் கொண்ட கும்பல் என்னை வழி மறித்து வாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கியது. அவர்களிடம் இருந்து தப்பி, அரசு பேருந்தில் ஏறினேன். காவல் நிலையம் மூலமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தேன். எனது 2 கைகளிலும் நரம்புகள், ரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டன. கடுமையான போராட்டங்களுக்கு பின்பு உயிர் பிழைத்தேன். கடந்த சில வருடங்களாக தொடர்ந்து சிகிச்சையில் இருக்கிறேன்.

 

என்னால் எந்த வேலையும் செய்ய முடியாததால், வருமானம் இன்றி எனது குடும்பம் தவிக்கிறது. இதற்கிடையே என்னை கொலை செய்யும் நோக்கத்தில் தாக்கியவர்கள் மீதான வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே இந்த வழக்கை வேறு அமைப்புக்கு மாற்றி, விரைவாக விசாரிக்கும்படி உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில், 2018-ம் ஆண்டு நடந்த சம்பவம் தொடர்பான வழக்கில் தற்போது வரை எந்த முன்னேற்றமும் இல்லை. மனுதாரர் உயர் அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த பலனும் இல்லை. எனவே இந்த வழக்கை உடனடியாக வேறு அமைப்புக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று வாதிடப்பட்டது. இதனை குறித்துக்கொண்ட நீதிபதி, மனுதாரர் தாக்கப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட்டார்.

 

 



 

 இந்தியா முழுவதும் எத்தனை மாநிலங்களில் பணியாளர்  வருங்கால வைப்புநிதி அலுவலகம்,  நகராட்சி வங்கி கணக்கை முடக்கியுள்ளது? - மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி






நகராட்சிக்கு உட்பட்ட ஒப்பந்த வேலைகள் செய்யும் நிறுவனம், அதன் ஊழியர்களுக்கான பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதியை 71 லட்சத்திற்கு மேல் கட்டாமல் நிலுவையில் வைத்ததால், பட்டுக்கோட்டை நகராட்சியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டது. இதனை ரத்து செய்யக் கோரி பட்டுக்கோட்டை, நகராட்சி ஆணையர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "பட்டுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட ஒப்பந்த வேலைகள் செய்யும் நிறுவனம், அதன் ஊழியர்களுக்கான பணியாளர் வருங்கால வைப்பு நிதியை அதற்கான அலுவலகத்தில் கட்ட வேண்டும். 


அதன் நிலுவைத் தொகை 71 லட்சத்திற்கு மேல் இருந்து வருகிறது. இதன் காரணமாக பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தின் இந்தியன் வங்கி கணக்கை முடக்கி உள்ளனர். இதனால் தேர்தல் நேரங்களில் நகராட்சி சார்பாக செலவுகள் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே பட்டுக்கோட்டை நகராட்சியின் அலுவலக வங்கி கணக்கை முடக்கியதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்." என கூறியிருந்தனர்.


இந்த வழக்கின் முந்தைய விசாரணையில் பணியாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகம், பட்டுக்கோட்டை நகராட்சியின் வங்கி கணக்கை முடக்கியதை ரத்து செய்தது.இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.பணியாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் தரப்பில், கர்நாடக மாநிலத்தில் 13 நகராட்சிகளில் இதே போல வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.


அப்போது நீதிபதிகள், இந்தியா முழுவதும் எத்தனை மாநிலங்களில் பணியாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகம் நகராட்சியின் வங்கி கணக்கை முடக்கியுள்ளது?இந்தியா முழுவதும் இதே நடைமுறைதான் பின்பற்றப்படுகிறதா?இந்த வழக்கில் மத்திய அரசின் நிலைபாடு என்ன? என கேள்வி எழுப்பி இது குறித்து  பணியாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.