தேனி மாவட்டம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்து வருகிறது . தேனி மாவட்டத்தில் மக்கள் தொகை பெருக்கம் , மீண்டும் ரயில் சேவை , வளர்ந்து வரும் மின்சாதன பொருள்களின் வணிகம் , பள்ளிகளில் டிஜிட்டல் முறையிலான வகுப்புகள், வீடுகளில் மின்சார பொருட்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற காரணங்களால் தேனி மாவட்டத்தில் கூடுதல் மின் தேவை ஏற்பட்டுள்ளது . தேனி மாவட்டத்தில் பெரியாறு மின்நிலையம், சுருளியாறு நீர்மின்நிலையம் மற்றும் மைக்ரோ பவர் ஸ்டேஷன்களில் மின் உற்பத்தி செய்யப்பட்டாலும், அவைகளில் அனைத்து நேரங்களிலும் ஒரே மாதிரியான உற்பத்தி செய்ய முடியவில்லை. இதனால் ஏற்படும் மின் தேவையை ஈடுகட்ட தேனி மாவட்டத்திலுள்ள காற்றாலைகள் பெரும் பங்காற்றுகிறது எனலாம் .
இந்தியாவின் காற்றாலை மூலம் தயாரிக்கப்படும் மின் உற்பத்தியில் தமிழ்நாடு 55% பங்கு பெற்று முதல் இடத்தில் உள்ளது. இந்த காற்றாலை மூலம் தமிழ்நாட்டின் மின் தேவைகளில் 20% அளவை நிறைவு செய்கிறது. அதிகமாக காற்று வீசும் பட்சத்தில் ஒரு காற்றாலையில் அதிகபட்சமாக அதன் உற்பத்தி திறனை பொறுத்து ஒரு நாளைக்கு 38 ஆயிரம் யூனிட் வரையில் மின்சார உற்பத்தி செய்ய முடியும்.
தமிழகத்தில் திண்டுக்கல், கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக தேனி மாவட்டத்தில் அதிக அளவில் காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி, ஜி.உசிலம்பட்டி, கண்டமனூர்,போடி, நாகலாபுரம், ஆத்தங்கரைப்பட்டி, மரிக்குண்டு, தேக்கம்பட்டி ராசிங்காபுரம், சங்கராபுரம், ஒவுலாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட காற்றாலைகள் உள்ளன . பொதுவாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்யும் காலத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள காற்றாலைகளில் மின்சார உற்பத்தி அதிகமாக இருக்கும். தற்போது காற்றாலையில் 7000 முதல் 8000 யூனிட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது .
தேனி மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட காற்றாலைகள் இருந்தாலும் , தென்மேற்குப் பருவக் காற்று அதிகமாக வீசக் கூடிய பகுதியான கம்பம் பள்ளத்தாக்கில் மிகக் குறைவான அளவிலேயே காற்றாலைகள் உள்ளன. தேனி மாவட்டத்தில் கூடுதலான காற்றாலைகள் அமைக்கப்பட்டால், தினமும் 40 ஆயிரம் யூனிட் வரை மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்கின்றனர் வல்லுநர்கள்.
தற்போது தேனி மாவட்டத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை சமாளிக்க கம்பம் பள்ளத்தாக்கில் காற்றாலை அமைக்க கூடிய இடத்தை அதிகாரிகள் தேர்வு செய்து, அதிக அளவில் காற்றாலை அமைத்து மின்சாரத்தை உற்பத்தி செய்தால் , மாவட்டத்திற்கு தேவையான மின்சாரம் முழுமையான அளவில் கிடைக்கும் என கம்பம் பள்ளத்தாக்கு பகுதி மக்கள் கூறி வருகின்றனர். இதனால் அதிகாரிகள் ஆய்வு காற்றாலைகள் அமைத்து மின்சாரம் உற்பத்தி செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற