ஜனாதிபதி திரவுபதி முர்மு இம்மாதம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக கேரளா செல்ல உள்ளார். இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கேரளா செல்லும் அவர், 18 மற்றும் 19ம் தேதிகளில் கோட்டயம் குமரகத்தில் தங்கி இருப்பார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவிதாங்கூர் தேவசம் போர்டு இணையதளத்தில், 18,19 ஆகிய தேதிகளில் யாரும் முன்பதிவு செய்ய வழிவகை இல்லை. சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மாதாந்திர பூஜைகளுக்காக தமிழ் மாதம் 1-ம் தேதி முதல் 5 நாள்கள் நடை திறக்கப்பட்டிருக்கும். அப்போது பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள். வைகாசி மாதத்திற்கான மாதாந்திர பூஜைகளுக்காக வரும் 14-ம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை நடைதிறக்கிறது. 19-ம் தேதி இரவு 10 மணிவரை பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு வரும் 18-ம் தேதி சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து கேரள காவல்துறை மற்றும் சபரிமலை கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 18-ம் தேதி கேரளா வரும் ஜனாதிபதி திரெளபதி முர்மூ அன்று அல்லது 19-ம் தேதி சபரிமலையில் தரிசனம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து சபரிமலை ஐயப்ப சுவாமி கோவிலில் ஆன்லைன் முன்பதிவில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்ப சுவாமி கோவிலில் தரிசனம் செய்ய முன்பதிவு செய்யும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு இணையதளத்தில், 14-ம் தேதி மலை 5 மணி முதல் 17-ம் தேதி இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் முன்பதிவு செய்ய முடியும். 18 மற்றும் 19-ம் தேதிகளில் முன்பதிவு செய்ய வழிவகை ஏற்படுத்தவில்லை. இந்த இரண்டு நாள்களில் ஏதாவது ஒருநாள் ஜனாதிபதி திரெளபதி முர்மு சபரிமலையில் தரிசனம் செய்யலாம் என்பது உறுதி ஆகியுள்ளது. வரும் 18-ம் தேதி கோட்டயம் குமரகத்தில் ஜனாதிபதி தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சபரிமலையில் உள்ள தேவசம்போர்டு விடுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றுவருவதால் 18-ம் தேதி சபரிமலை செல்லும் ஜனாதிபதி அங்கு தங்கிவிட்டு மறுநாள் திரும்பிச்செல்ல வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. பம்பாவில் இருமுடி கட்டி அங்கிருந்து சுவாமி ஐயப்பன் சாலை வழியாக காரில் சபரிமலை செல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சபரிமலைக்கு தரிசனத்துக்காக ஜனாதிபதி வருகைபுரிவது இதுதான் முதல்முறையாகும். ஜனாதிபதியின் வருகையை ஒட்டி, சபரிமலை தேவசம் போர்டும், அம்மாநில போலீசாரும் முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி சபரிமலையில் ஜனாதிபதி வரும் நாட்களில் கடுமையான பாதுகாப்பும், கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் மெய்நிகர் முன்பதிவு உள்ளிட்ட ஏற்பாடுகள் மாற்றம் செய்யப்படும் என்றும், வழக்கமான பக்தர்கள் அனுமதி ரத்து செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஜனாதிபதி வருகையை ஒட்டி, சபரிமலை கோவிலில் சீரமைப்பு பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. சபரிமலைக்கு இந்திய ஜனாதிபதி ஒருவர் வருவது இதுவே முதன் முறையாகும்.