திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டியில்  தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்  சங்கத்தின் 50ம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாநாட்டில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைத்துக் கொடுத்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.




தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள்  சங்கத்தின் 50 ஆவது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டியில் மண்பாண்ட தொழிலாளர்களின் மாநாடு நடைபெற்றது. மண்பாண்டம், மண் காகித பொம்மை, டரகோட்டா, செங்கல், சொருகு ஓடு செய்பவர்கள் என ஆயிரக்கணக்கான மண்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் குலாலர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் இந்த மாநாட்டில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முதலாவதாக  மண்பாண்ட தொழிலாளர்களுக்காக நலவாரியம் அமைத்து அதன் மூலம் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயர்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டதற்காக தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.




இதுகுறித்து சேர்மன் நாராயணன் கூறியதாவது: தமிழகம் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள்  மண்பாண்ட தொழிலாளர்களுக்காக அமைத்துக் கொடுத்த நல வாரியத்தில்  58 ஆயிரம் தொழிலாளர்கள் இணைந்துள்ளனர். மேலும் உறுப்பினர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரண நிதியாக நான்காயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது, கடந்த ஆண்டு ஐந்தாயிரம் ரூபாயாக அது உயர்த்தப்பட்டது. ஆண்டுதோறும் மழைக்கால நிவாரண நிதியாக பத்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.




மீனவர்களுக்கு 5000 ரூபாயில் இருந்து 8000 ரூபாய் நிவாரண நிதியாக உயர்த்தப்பட்டது போல எங்களுக்கும் 8000 ரூபாயாவது வழங்க வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். நெசவாளர்களின் நலனை கருதி பொங்கல் பண்டிகையின் போது நியாய விலை கடைகளில் சேலை, வேஷ்டி வழங்குவது போல மட்பாண்ட தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு மண்பானை வழங்க வேண்டும் என்றும் கூறினார்.மேலும் நலிவடைந்து வரும் மண்பாண்ட தொழிலை உயர்த்துவதற்காக தொழில்நுட்பத்துடன் கூடிய கலைநயமிக்க மண்பாண்டம் செய்யும் தொழிற்கூடங்கள் அமைத்து தர வேண்டும்.




மண்பாண்டங்கள் செய்வதற்கு களிமண் எடுப்பதற்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது, இதனால் பரம்பரையாக மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்கள் செங்கல் சூளைக்கு பணிக்கு செல்கின்றனர். இதனால் மண்பாண்ட தொழில் நழிவடைந்து வருகிறது. எனவே தமிழக அரசு களிமண் எடுப்பதற்கு அளிக்க வேண்டும்  என்பன உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவ்வாறு கூறினார். மேலும் இந்த மாநாட்டில் 5000க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.