மாவட்டத்தில் நடக்கும் கட்சிக் கூட்டங்கள், கோயில் திருவிழாக்கள், ஊர்வலங்கள்,  ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், கட்சித் தலைவர்களின் வருகை, முக்கிய பிரமுகர்களின் வருகை, போன்ற நிகழ்ச்சிகள் ஏதும் நடைபெற்றால் அங்கு  ஏதேனும்  அசம்பாவித சம்பவம் நடைபெறும் போது பொதுமக்களுக்கும், முக்கிய பிரமுகர்களுக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுத்தாமல் பாதுகாப்பது காவல்துறை தான். ஊரில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடக்கும் போது கலவரம் ஏற்பட்டால், அந்தக் கலவரத்தை கட்டுப்படுத்துவது, மேலும் அந்த கலவரம் பெரிய அளவிற்கு வளராமல் தடுப்பது,  கலவரத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பது போன்றவைகள் காவலர்களின் தலையாய பணியாகும். தமிழக காவல் துறையில் பல பிரிவுகள் இருந்தாலும், கலவரத்தை அடக்குவது மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவர்களை அடக்குவது போன்ற செயல்களில் ஆயுதப்படை காவல்துறையினரின் பங்கு இன்றியமையாததாகும்.



எங்கு கலவரம் நடந்தாலும் முதலில் குவிக்கப்படுவது  காவல் துறை மற்றும் மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் தான். தற்போது தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆயுதப்படை ஐந்து பிரிவுகளாக உள்ளது. இந்தப் பிரிவுகள் அனைத்தும் ஒன்றிணைந்து தேனி மாவட்டத்தில் ஏதேனும் கலவரம் ஏற்பட்டால் அதனை அடக்குவது குறித்து முன் எச்சரிக்கையாக ஒரு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர். இன்று காலை, தேனி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை அரங்கில் தேனி மாவட்ட ஆயுதப்படையில் உள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் காவலர்கள் ஒன்றிணைந்து , மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பிரவீன் உமேஷ் டேங்கரோ தலைமையில்  கலவரம் தொடர்பான ஒரு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர்.



இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் இரு பிரிவாக பிரிந்து ஒரு பிரிவு காவலர்கள் போலவும் மற்றொரு பிரிவு கலவரத்தை தூண்டும் நபர்கள் போலவும் சித்தரிக்கப்பட்டு இந்த ஒத்திகை நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் உண்மையான கலவரம் நடக்கும் போது என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை அனைத்து காவலர்களும் அறியும் விதமாகவும், உண்மையான கலவரத்தில் எவ்வாறு காவல்துறை அதிகாரிகள் கலவரத்தை அடக்குவார்கள் என்பது போன்ற ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.



கலவரம் நடக்கும் போது முதலில் ஆர்டிஓ அதிகாரி கலவரத்தை தூண்டுபவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவார். அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு உடன்படாத கலவரத்தை தூண்டுபவர்கள், மேலும் கலவரத்தில் ஈடுபடும் போது முதலில் தண்ணீரை பீச்சி கூட்டம் கலைக்கப்படும், அதிலும் கலைந்து செல்லாத போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த, கண்ணீர் புகை குண்டு வீசியும், தடியடி நடத்தியும், மாவட்ட ஆட்சியர் அனுமதி அளிக்கும்பட்சத்தில், துப்பாக்கி சூடு நடத்துவது குறித்தும், துப்பாக்கிச் சூடு நடத்தும் போது எவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டும் என்பதும் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி, உண்மையாகவே கலவரம் நடப்பது போல சித்தரிக்கப்பட்டு நடந்தது.




இதுகுறித்து மாவட்ட காவல் ஆயுதப் படை அதிகாரிகள் கூறுகையில், கலவரம் ஏற்படும் போது அதனை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். கலவரத்தில் போலீசார் உட்பட பலர் காயம் அடைவர். ஏன் சில நேரங்களில் உயிரிழப்பு ஏற்படுவதும் கூட நிகழும்.  அவ்வாறு கலவரம் நடக்கும் போது எவ்வாறு கலவரத்தை கட்டுப்படுத்துவது என்பதை பற்றிய ஒரு ஒத்திகை நிகழ்ச்சி மாவட்ட ஆயுதப்படை அரங்கில் நடைபெற்றது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் ஆயுதப் படையை சேர்ந்த காவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த ஒத்திகை நிகழ்ச்சி மூலம் உண்மையான கலவரம் நடக்கும் போது அதனை கட்டுக்குள் கொண்டுவருவது மிகவும் எளிது என்றனர்.


 


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற


 


 


https://bit.ly/2TMX27X