மானாமதுரையில் காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும், காங்கிரஸ் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டி வேலுவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சிவகங்கை மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் காரைக்குடியில் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி ஹெச்.ராஜாவை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் காங்கிரஸ் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.  இந்த நிகழ்வுகளில் சிவகங்கை எம்.பி கார்த்தி ப.சிதம்பரம் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டு தொண்டர்களிடம் பேசி வருகின்றனர். மானாமதுரை அருகே வெள்ளக்குறிச்சி கிராமத்தில் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது.



அப்போது கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டி வேலு 'கட்சியில் வளர்ச்சி அடையவில்லை,. முறையாக கட்சி கூட்டத்திற்கு அழைப்பு யாருக்கும் வருவதில்லை' என பல குற்றச்சாட்டுகளை வாசிக்க ஆரம்பித்தார். அப்போது குறுக்கிட்ட ப.சிதம்பரம் 'நிறுத்துங்கள்' என வலியுறுத்தினார். வேலு தொடர்ந்து பேசியதால்  இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது ‌. ப.சிதம்பரம் பேசுவதை குறுக்கிடவே வாக்குவாதம் கடுமையானது. ஒரு கட்டத்திற்கு மேல் மிகவும் கோபமடைந்த ப.சிதம்பரம் மேடையில் இருந்து இறங்கி வந்த நிர்வாகியிடம், ”நீங்கள் போய் மேடையில் அமருங்கள். ‌ நான் உங்கள் நாற்காலியில் அமர்ந்து ‌கொள்கிறேன்‌‌” என்று கூறினார்.



கோபம் அடைந்த கட்சி நிர்வாகி, சிறிது நேரத்தில் தான் அமர்ந்திருந்த  நாற்காலியை தூக்கி எறிந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த ஆலோசனை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காங்கிரஸ் கட்சி மாவட்ட செயற்குழு குழு உறுப்பினர் பாண்டிவேலு  கூறுகையில் 'நான் பல வருடமாக கட்சியில் இருக்கிறேன் கட்சிக்காக உழைத்து பாடுபட்டு கொண்டிருக்கிறேன். காங்கிரஸ் கட்சி மானாமதுரையில் முறையாக செயல்படவில்லை.



இது குறித்து கட்சிக்கூட்டத்தில் நான் பேசியபோது,  தலைவரிடம் எனது  ஆதங்கத்தை சற்று கோபத்துடன் வெளிப்படுத்தினேன்.  இரண்டு பேருக்கும் இடையில் சிறிது நேரம் வாக்குவாதம் நடைபெற்றது. பின்பு நிர்வாகிகள் வந்து சமாதானம் செய்தார்கள். வேற ஒன்றும் இல்லை' என்று தெரிவித்தார்.