பழனியில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் நிலம் முறைகேடாகப் பத்திரப் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தைக் கண்டித்து சிபிஎம் சார்பில் பழனியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன், இந்த நில மோசடியில் தொடர்புடைய அதிகாரிகளையும் போலி ஆவணம் தயாரித்தவர்களையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று தவெக அரசை வலியுறுத்தியுள்ளார்.

Continues below advertisement

​​திண்டுக்கல் மாவட்டம் பழனியில், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பத்திரப் பதிவு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

Continues below advertisement

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், பழனி கோயில் நிலம் மோசடி செய்யப்பட்டிருப்பது ஒட்டுமொத்த தமிழகத்திலும் பெரும் பேசும்பொருளாக மாறியுள்ளது என்றார்.

​இந்த 100 கோடி ரூபாய் நில மோசடி விவகாரத்தில் பல்வேறு மர்ம முடிச்சுகள் இருப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், வழக்கமான சார்பதிவாளர் விடுப்பில் சென்றதும், கொடைக்கானலில் இருந்து மாற்று அதிகாரி வந்து ஒரே நாளில் வெள்ளத்துறை, சேதுபதி ஆகிய இருவருக்குப் பத்திரப் பதிவு முடித்துக் கொடுத்ததும் எப்படி என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். 

மேலும், நிலத்தை வாங்கியவர்கள் கொடுத்ததாகக் கூறப்படும் இரண்டு கோடி ரூபாய்க்கான செக் (Cheque) போலி ஆவணமா, வங்கியில் பணம் இருக்கிறதா என்ற விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை என்றார். தவெக அரசு உடனடியாக தலையிட்டுப் பத்திரப் பதிவை ரத்து செய்ததும், சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டதும் நல்ல நடவடிக்கை என்றாலும், இது 'அறியாமல் நடந்த தவறு' என்று அமைச்சர் கூறுவது உண்மையை மறைக்கும் செயலோ என்ற பொதுமக்களின் சந்தேகத்திற்கு இடமளிப்பதாக உள்ளது என்றார். 

எனவே, ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், குற்றவாளிகள் மற்றும் சார்பதிவாளர் இதுவரை கைது செய்யப்படாதது ஏன் எனக் கேள்வி எழுப்பிய அவர், தேவைப்பட்டால் நீதிமன்றத்தை நாடவும் சிபிஎம் தயங்காது என்றார்.

​தொடர்ந்து பேசிய அவர், நாடாளுமன்றத்தில் 'வந்தே மாதரம்' பாடலைக் கட்டாயமாக்கும் வகையில் மத்திய பாஜக அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள சட்டத்திருத்தம் மதச்சார்பற்ற கொள்கைக்கு எதிரானது என்றும், தேசவிரோதச் செயலாகும் என்றும் சாடினார். கரூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஜீரோ வேல்யூ தடை உத்தரவை ரத்து செய்த தவெக அரசைப் பாராட்டிய அவர், லஞ்ச ஊழலை ஒழிப்பதாகக் கூறும் தமிழக முதலமைச்சர் விஜய் தனது அறிவிப்புகளை வெறும் வார்த்தை ஜாலமாக இல்லாமல் உறுதியோடு செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.  மேலும், தனியார் தொலைக்காட்சி நெறியாளர் விஜயன் மீதான காவல்துறையின் விசாரணை மற்றும் செல்போன் பறிப்பு நடவடிக்கை அராஜகத்தின் உச்சம் எனக் கூறி அதற்குத் தனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்தார்.