பழனி முருகன் கோயில் நிர்வாகத்தின் சார்பில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் நவம்பர் 20 ஆம் தேதி 2, 65,940 பெட் ஜார்கள் விற்று சாதனைப்படைத்து உள்ளது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய வருகை தருகின்றனர். பழனி முருகன் கோயிலின் பிரசித்தி பெற்ற பிரசாதமாக பஞ்சாமிர்தம் விளங்குகிறது. மலைவாழை, கற்கண்டு, நெய், கரும்புசர்க்கரை, தேன் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சுவைமிகுந்ததாக தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் பிரசாதமானது அதிகளவில் பக்தர்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் 2019 ஆம் ஆண்டு புவிசார் குறியீடு பெற்றது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாமிர்தத்தை கோயில் நிர்வாகம் சார்பில் மலைக்கோயில், கிரிவலவீதி, பேருந்துநிலையம் போன்ற இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. கோயில் நிர்வாகத்தின் சார்பில் இதற்கான தயாரிப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுகாதார முறையில் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டு டின், பெட் ஜார்களில் அடைக்கப்பட்டு விற்கப்படுகிறது. 470 கிராம் எடையுள்ள பஞ்சாமிர்தம் டின்., ரூ.45, பெட் ஜார்., ரூ.40, 200 கிராம் எடையுள்ள பெட் ஜார் ரூ. 20 விலைகளில் விற்கப்படுகிறது.
பழனிக்கு வருகை தரும் பக்தர்கள் அதிக அளவில் கோயில் நிர்வாகத்தின் சார்பில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தத்தை வாங்கி செல்கின்றனர். இந்த ஆண்டு கோயில் நிர்வாகம் சார்பில் ஐயப்ப பக்தர்கள் வருகையை முன்னிட்டு கடந்த சில நாட்களுக்கு முன் பஞ்சாமிர்த விற்பனையை அதிகப்படுத்தியது. இதற்கென 15 நிரந்தர பஞ்சாமிர்த விற்பனை மையங்கள், ஒரு தற்காலிக பஞ்சாமிர்த விற்பனை மையம் அமைக்கப்பட்டது. கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணி 24 மணி நேரமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கடந்த 2023ல் டிசம்பர் மாதம் 27ம் தேதி ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 283 பஞ்சாமிர்த ஜார்கள் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு (2025) நவம்பர் 19ல் ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 480 ஜார்கள் விற்பனையானது. இந்த விற்பனை சாதனையை ஒரே நாள் இடைவெளியில், நேற்று முன்தினம்(நவ., 21) ஒரு நாள் மட்டும் இரண்டு லட்சத்து 65 ஆயிரத்து 940 ஜார்கள் விற்கப்பட்டுள்ளது. இது இதுவரை விற்கப்பட்டுள்ள விற்பனையில் அதிக அளவு ஒரே நாளில் விற்கப்பட்டு உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கோயில் நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் தரம் காரணமாக அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.