தமிழகத்தில் கிராமபுற ஏழைகளுக்கு உணவை உறுதி செய்வதற்கான பல்வேறு திட்டங்கள் இருக்கும் நிலையில் நகர்ப்புற ஏழைகளுக்கு 3 வேளை உணவை உறுதிப்படுத்துவதற்காகவே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் கடந்த 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் தேதி சென்னையில் முதன் முறையாக மலிவு விலை அம்மா உணவகங்கள் செயல்பாட்டிற்கு வந்தன.

 


 

பின்னர் தமிழத்தில் உள்ள மற்ற மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டது. சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை மொத்தம் உள்ள 200 வார்டுகளுக்கு 2 உணவகங்கள் விகிதம் 400 உணவகங்களும், மிக முக்கிய அரசு மருத்துவமனைகளான ஸ்டேன்லி, ராஜீவ்காந்தி உள்ளிட்ட  மருத்துவமனைகளில் 7 என மொத்தமாக 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.  சென்னை அல்லாத தமிழகத்தின் பிற மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் 247 அம்மா உணவகங்கள் என தமிழகம் முழுதும் மொத்தமாக 654 அம்மா உணவகங்கள்   செயல்பட்டு வருகின்றன. 

 


அவ்வப்போது சிறிய மாற்றங்களுடன் செயல்படும் இந்த உணவகத்தின் மூலம் ஏழை எளிய மக்கள், ஆதரவற்றோர்கள், வண்டி தொழிலாளர்கள், முதியோர்கள், லாரி ஓட்டுநர்கள் என அனைத்து தரப்பினர் பயன்பெறுகின்றனர். இப்படி மக்கள் மத்தியில் எதிர்பார்க்காத ஆதரவை பெற்ற அம்மா உணவகங்களுக்கு தி.மு.க ஆட்சியில் அமர்ந்த ஆரம்பத்திலேயே சோதனை வந்தது. சென்னையில் அம்மா உணவகத்தை தி.மு.கவினர் சிலர் சூறையாடினர். அங்கிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேனர்கள் கிழிக்கப்பட்டன.

 





அதன் வீடியோ வெளியே அனைத்து தரப்பினருமே பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக அராஜகத்தில் ஈடுபட்ட தி.மு.கவினர் கட்டம் கட்டப்பட்டனர். தொடர்ந்து மழை வெள்ள பாதிப்புகளின் போது அம்மா உணவகத்தில் இலவசமாக உணவுகளை வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் மதுரை மாநகராட்சியில் கிட்டதட்ட 12 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன.  இந்நிலையில் மதுரையில் உள்ள 10அம்மா உணவகங்களிலும் ஏற்கனவே. பணிபுரிந்த பெண் பணியாளர்கள் பணி நீக்கம் செய்துவிட்டு திமுக ஆதரவுடைய பணியாளர்கள் நியமிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனை சாதகமாக பயன்படுத்தி திமுக கவுன்சிலர்கள் அவரவர் பகுதிகளில் உள்ள அம்மா உணவகத்தை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு முன்னுதாரனமாக மதுரை புதூர் பகுதியில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் மாநகராட்சி அனுமதித்துள்ள 1ரூபாய்க்கு விற்பனை செய்யக்கூடிய இட்லி மற்றும் 5ரூபாய் பொங்கலுக்கு பதிலாக பூரி, வடை, உப்புமா, சப்பாத்தி,  ஆம்லேட் என தனியார் உணவகத்தில் கிடைப்பது போன்று பல்வேறு வகையான உணவுகளை வழங்கிவருகின்றனர். இதேபோல் மதிய வேளைகளிலும் ரசம், மோர், ஆம்லேட் என அனுமதிக்கப்பட்ட சாதத்தோடு சேர்த்து விற்பனை செய்துவருகின்றனர்.

 


அம்மா உணவகத்திற்காக வழங்கப்படும் மாவு, சிலிண்டர் மற்றும் ஊழியர்களை தனக்கு பிடித்தவாறு உணவுகளை விற்பனை செய்ய வைத்து அதில் லாபம் ஈட்டுவதாகவும் நாள்தோறும் 500 முதல் ஆயிரம் ரூபாய் வரை அம்மா உணவக ஊழியர்களிடம் பெற்றுக்கொள்வதாகவும் புகார் எழுந்துள்ளது. மேலும் இந்த உணவுகளை தயாரிப்பதற்காக ரேசன்கடை அரிசி, கோதுமை, எண்ணெய், பருப்பு ,உளுந்து, ரவை போன்றவை பயன்படுத்துவதாகவும் , ரேசன் அரிசி பொருட்கள் அம்மா உணவகத்திற்கு எப்படி வருகின்றது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. இவ்வாறாக தங்களின் சுயநலத்திற்காக அம்மா உணவகத்தை வணிக செயல்பாட்டிற்காக மாற்றும் திமுகவினர் அம்மா உணவகத்தில் கை கழுவுவதற்கான சுகாதாரமற்ற நீர் மற்றும் தட்டுக்களை பயன்படுத்தும் நிலையை கண்டுகொள்வதில்லை எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.



இது போன்று பல்வேறு வகையான உணவுகளை விற்பனை செய்யப்படும் நிலையில் அதற்கான பில்களை பணியாளர்கள் தாங்களாகவே பேப்பரில் பில் எழுதி கொடுப்பதால், மாநகராட்சிக்கு முறைகேடான கணக்கை ஒப்படைத்து மாநகராட்சிக்கு இழப்பீடு ஏற்படுத்துவதோடு, அம்மா உணவகத்தால் கடும் நஷ்டம் என கூறி அத்திட்டத்தை முடக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடும் நிலை உருவாகியுள்ளது.

 

இது தொடர்பாக கவுன்சிலர் தரப்பில் விளக்கம் கேட்டபோது தாங்கள் பொதுமக்களின் வசதிக்காக குறைந்த விலையில் வழங்குவதாகவும் அரசியல்நோக்கோடு சிலர் புகார் அளிப்பதாகவும் தெரிவித்தனர்